பதிவு செய்த நாள்
12
நவ
2018
03:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேசுவரர் கோவிலில் தீப திருவிழா, நகர காவல் தெய்வமான துர்க்கையம்மன் வழிபாட்டுடன் துவங்கியது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வரும், 14ல், கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதை காண பல்வேறு பகுதிகளிலிருந்து, 20 லட்சம் பக்தர்கள் வருவர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு கருதி, எவ்வித அசம்பாவிதம் நடக்க கூடாது என வேண்டியும், திருவிழாவிழா இனிதே நடக்க வேண்டியும், நகர காவல் தெய்வமான துர்க்கையம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பத்து நாட்கள் தொடர்ந்து நடக்கும் விழாவில், 20ல், பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்யர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர், ஆகியோர் தனித்தனி ரதத்தில், வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். வரும், 23ல், 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. விழாவை முன்னிட்டு, கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.