பதிவு செய்த நாள்
13
நவ
2018
11:11
சபரிமலை: கேரளாவில், பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், மண்டல மகரவிளக்கு பூஜை சீசன், விரைவில் துவங்கவுள்ள நிலையில், லட்சக்கணக்கில் திரண்டு வரும் பக்தர்களுக்கு போதிய வசதிகள் செய்யப்பட்டிருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கேரளாவில், சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அய்யப்ப பக்தர்கள், ஹிந்து அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினர். சமீபத்தில், அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட போது, கோவிலுக்கு வர முயன்ற பல பெண்கள், பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால், சபரிமலையில் பதற்றம் நிலவியது. இந்நிலையில், மண்டல, மகரவிளக்கு பூஜை சீசன் சில நாட்களில் துவங்க உள்ளது. இதற்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளில்இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவது வழக்கம். தவிர, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்ய, 600க்கும் மேற்பட்ட பெண்கள், இணையதளம் மூலம் முன்பதிவு செய்துள்ளனர். இந்த பெண்கள், மகரவிளக்கு பூஜைக்கு வந்தால், அவர்களை தடுத்து நிறுத்த, ஹிந்து அமைப்பினரும், அய்யப்ப பக்தர்களும் போராட்டங்கள் நடத்துவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதை கட்டுப்படுத்த, சபரிமலை பகுதியில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட வேண்டும். சில மாதங்களுக்கு முன், கேரளாவில் பெரும்பான்மை மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த பெருமழையால், மாநிலம் முழு வதும் வெள்ளக்காடானது. வரலாறு காணாத வகையில் பெய்த மழை, அய்யப்பன் கோவில் மற்றும் அதன் சுற்றுப்புறங்களையும் விட்டு வைக்கவில்லை. இதனால், பக்தர்களுக்கு
ஏற்கனவே செய்யப்பட்டிருந்த, கழிப்பறை, குளியல் அறை, தங்குமிடங்கள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன.சீசன் துவங்கும் முன், இவை சரி செய்யப்படுமா என, பக்தர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.இது குறித்து, அய்யப்பன் கோவிலை நிர்வகித்து வரும், திருவாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகி ஒருவர் கூறியதாவது: அய்யப்பன் கோவிலில், கடந்தாண்டு, மகரவிளக்கு பூஜை நாளன்று, 5.20 லட்சம் பக்தர்கள் வந்தனர். பிற நாட்களில், சராசரியாக, 25 ஆயிரம் முதல், ஒரு லட்சம் பேர் வரை வந்தனர்.இந்த கணக்கீட்டின் அடிப்படையில், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.