பதிவு செய்த நாள்
13
நவ
2018
11:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாளை தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா, நாளை காலை, 5:00 மணிக்கு உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சுவாமி தங்க கொடி மரம் முன் எழுந்தருள, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 23ல், காலை, 4:00 மணிக்கு கோவில் கருவறை எதிரே பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளதால், தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
கிரிவலப்பாதையில் பாதுகாப்பு பணிகள்: கிரிவலத்துக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புக்கு, 8,500 போலீசார் ஈடுபட உள்ளனர். நகரின் முக்கிய இடம், கிரிவலப்பாதை என, 34 இடங்களில் காவல் உதவி மையங்கள், 45 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன. திருவண்ணாமலை நகரில், 53 இடம், கோவில் வளாகத்தில், 103 இடம், கிரிவலப்பாதையில், 350 இடத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள், நேற்று துவங்கின. குற்ற நிகழ்வுகளை தடுக்க ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. 2,000 பேர் மலை மீதேறி, தீப தரிசனம் காண, அனுமதி சீட்டு வழங்கப்பட உள்ளது.