அறுபடை வீடு கொண்ட திருமுருகா- திருப்பரங்குன்றம் : ஆறுபடை வீடுகளில் முதல்தலம் திருப்பரங்குன்றம். தெய்வானை- முருகனின் திருமணத்தலம் இது. பூதங்களிடம் சிக்கிய புலவர்களை மீட்க நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாடலை இங்கு பாடினார். முருகனின் வேலால் வெளிப்பட்ட காசிச்சுனை மலை மீது உள்ளது. மணக்கோல முருகனாக அருள்வதால் வழிபடுவோருக்கு நல்ல மணவாழ்வு அமையும்.
திருச்செந்துார்: இரண்டாம் படைவீடான இது கடற்கரைத் தலம். சூரபத்மனின் வரலாற்றை வியாழபகவான் மூலமாக கேட்டறிந்தார் முருகன். வீரபாகு உள்ளிட்ட நவவீரர்கள் சூரசம்ஹாரத்தில் முருகனுக்கு உதவினர். சுகப்பிரம்ம முனிவர் இங்கு வழிபட்டு பலன் பெற்றார். முருகன் வேலினால் உண்டாக்கிய கந்தபுஷ்கரணி நாழிக்கிணறு தீர்த்தம் சிறப்பானது.
பழநி: மூன்றாம் படைவீடு பழநி. திருஆவினன்குடி என்பது புராணப்பெயர். சூரபத்மனின் குருநாதரான இடும்பாசுரன், பொதிகை மலையில் வாழ்ந்த அகத்தியரின் சீடராக இருந்தான். அவனால் காவடியாக சுமந்து வரப்பட்ட சிவகிரி, சக்திகிரி மலைகளே பழநியில் இருக்கின்றன. இதனால் காவடி வழிபாடு பிரசித்தம். முருகன் ஆண்டிக் கோலத்தில் அருள்கிறார்.
சுவாமிமலை: ஓம் என்னும் பிரணவ மந்திரத்திற்குப் பொருள் தெரியாத பிரம்மாவை சிறையிலிட்டார் முருகன். மந்திரத்தின் பொருள் தனக்கும் தெரியாதது போல சிவன் நடிக்க, முருகன் தன் தந்தைக்கும் அதன் பொருளை எடுத்துச் சொன்னார். இதனால் தகப்பன் சுவாமியாக சுவாமிமலையில் அருள்கிறார். மாணவர்கள் வியாழனன்று இங்கு வழிபட படிப்பில் சிறந்து விளங்குவர்.
திருத்தணி: மலைகளில் சிறந்தது தணிகை மலை என்கிறது கந்த புராணம். திருச்செந்துாரில் சூரனுடன் போர் செய்த முருகன், இங்கு வந்து கோபம் தணிந்தார். குறமகளான வள்ளியை காதல் மணம் புரிந்த தலம் இது. புராண காலத்தில் செருத்தணி என வழங்கப்பட்ட இத்தலம் திருத்தணியாக மாறியது. செருத்தணி என்றால் கோபம் தணிந்த இடம் என பொருள்.
சோலைமலை: கனிந்தபழம் உதிரும் சோலை நிறைந்த மலை சோலைமலை. இங்கு மும்மூர்த்தியாக இருந்து முருகன் உலகத்தை இயக்குவதாக திருப்புகழ் குறிப்பிடுகிறது. நாவல் மரத்தடியில் அவ்வையார் முன் சிறுவனாக வந்த முருகன் திருவிளையாடல் புரிந்தார். ஆறாவது படைவீடான இங்கு வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்புரிகிறார்.