பதிவு செய்த நாள்
14
நவ
2018
11:11
திருத்தணி: முருகன் கோவிலில் நடந்து வரும் கந்தசஷ்டி விழாவில், நேற்று உற்சவர் சண்முகப்பெருமானுக்கு புஷ்பாஞ்சலி விழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர். இன்று நண்பகலில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது. திருத்தணி முருகன் கோவிலில், கந்த சஷ்டி என்கிற லட்சார்ச்சனை விழா, கடந்த, 8 ம் தேதி துவங்கியது. தினமும், காலை 8:00 மணிக்கு முதல் இரவு, 8:00 மணி வரை காவடி மண்டபத்தில், உற்சவர் சண்முகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் லட்சார்ச்சனை நடந்தன.
விழாவின் நிறைவு நாளான,நேற்று அனைத்து முருகன் கோவில்களிலும் சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால், திருத்தணி முருகன் கோவிலில் சூரசம்ஹாரத்திற்கு பதிலாக, புஷ்பாஞ்சலி நடை பெறும். காரணம், முருகன் திருத்தணி மலையில் தான் சினம் தணிந்தார். அதனால் தான் புஷ்பாஞ்சலி நடத்தப்படுகிறது. அந்த வகையில், நேற்று, மாலை 4:00 மணிக்கு, திருத்தணி ம.பொ.சி., சாலையில் உள்ள சுந்தர விநாயகர் கோவில் முன் இருந்து, 20க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மலர் கூடைகளை கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி, ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக மலைக்கோவிலுக்கு எடுத்து சென்றனர்.
மாலை, 5:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, உற்சவர் சண்முகப்பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நடந்தது; தொடர்ந்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு வழிபட்டனர். நேற்று கந்தசஷ்டி நிறைவு நாள் மற்றும் முருகப்பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமை என்பதால், மலைக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் பொதுவழியில் குறைந்த பட்சம், 3 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். திருத்தணி டி.எஸ்.பி., சேகர் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் மலைக்கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று நண்பகல்,11:00 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.