பதிவு செய்த நாள்
14
நவ
2018
11:11
பழநி: கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு , பழநி முருகன்கோயில் கிரிவீதியில் நேற்று சூரசம்ஹாரம் நடந்தது. பழநி முருகன் கோயிலில் நவ.,8ல் காப்புக்கட்டுதலுடன் கந்தசஷ்டி விழா துவங்கியது. நேற்று சூரசம்ஹாரத்தை முன்னிட்டு மலைக்கோயில் அதிகாலை 4:00மணிக்கு திறக்கப்பட்டது. சின்னக்குமாரசுவாமி மலைக்கொழுந்து அம்மனிடம் பராசக்திவேல் வாங்கியவுடன் மதியம் 3:00 மணிக்கு நடை சாத்தப்பட்டது. பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து வெள்ளி மயில் வாகனத்தில் முத்துகுமார சுவாமி வள்ளி தெய்வானையுடன் கிரிவீதியில் எழுந்தருளினார்.
சூரசம்ஹாரம்: திருஆவினன்குடிகோயிலில் பராசக்திவேலுக்கு பூஜைசெய்து சின்னக்குமாரசுவாமி தங்கமயில் வாகனத்தில் வந்தார். மாலையில் கிரிவீதிகளில் வடக்கே தாரகாசூரன், கிழக்கில் பானுகோபன் சூரன், தெற்கேசிங்கமுகாசூரன், மேற்கில்சூரபத்மன் ஆகிய சூரன்களை வேல் எய்து வதம் செய்தார். இரவு வெற்றிவிழாவுக்குப்பின், சின்னக்குமராசுவாமி மலைக்கோயிலுக்கு புறப்படாகி அர்த்தஜாம பூஜை நடந்தது. இந்நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன், உதயகுமார் எம்.பி., இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், எஸ்.பி., சக்திவேல் மற்றும்பிரமுகர்கள் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கந்தசஷ்டி விழா நிறைவாக இன்று காலை 9:00 மணிக்கு மலைக்கோயிலில் சண்முகர், வள்ளி, தெய்வானைக்கும், கிழக்குரதவீதி பெரியநாயகியம்மன் கோயிலில்இரவு 7:00 மணிக்கு, முத்துகுமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.
திண்டுக்கல்: திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், என்.ஜி.ஓ., காலனி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தது. மாலையில் வேலுடன் மயில்வாகனத்தில் கிளம்பிய முருகன் சூரனை வதம் செய்தார். ஏராளமான பக்தர்கள் .கலந்து கொண்டனர். சூரசம்ஹாரம் முடிந்ததும் பக்தர்கள் தங்கள் விரதத்தை நீர், பால், பழச்சாறு அருந்தி நிறைவு செய்தனர். இன்று திருக்கல்யாணம் வைபவம் நடக்கிறது.
நத்தம்: நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் நடந்தது. இங்கு கடந்த நவ.,8 அன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. திரளான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவங்கினர். மறுநாள் சிவ பூஜை திருக்காட்சியும், நவ.10 ல் சிவ உபதேச திருக்கோல நிகழ்ச்சியும் நடந்தது. நவ.11ல் அருணகிரியாருக்கு நடனக்காட்சி அருளுதல், நேற்று முன்தினம் முருகப்பெருமான் வேல்வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.நேற்று காலை கந்தசஷ்டி கவச பாராயணத்துடன் கிரிவலம், திருமுருகாற்றுப்படை செந்தமிழ் வேள்வி நடந்தது. தொடர்ந்து கந்தசஷ்டி மகா அபிேஷகம் கலச நீராட்டுடன் தீபாராதனை நடந்தது. மாலையில் கிரிவலப்பாதையில் சூரசம்ஹார திருக்காட்சி நடந்தது. இதையடுத்து தெப்பகுளத்தில் தீர்த்தவாரி நடந்தது.