சபரிமலை: மண்டலகால பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை மாலை திறக்கிறது. 17-ம் தேதி அதிகாலை தொடங்கும் மண்டல காலத்தில் திரண்டு வரும் பக்தர்களை வரவேற்க சன்னிதானம் தயாராகி விட்டது. கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜை சபரிமலையில், ஒரு மண்டல காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு, நவ. 17-ம் தேதி கார்த்திகை முதல் தேதி முதல் மண்டலகாலம் தொடங்குகிறது. இதற்காக சபரிமலை நடை நாளை மாலை 5:00 மணிக்கு திறக்கிறது.
கடந்த ஒரு ஆண்டு காலமாக சபரிமலையில் தங்கி பூஜைகள் செய்து வரும் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடைதிறந்து தீபம் ஏற்றுவார்.அதை தொடர்ந்து கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கான மேல்சாந்திகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள சபரிமலை- வாசுதேவன் நம்பூதிரி, மாளிகைப்புறம் -நாராயணன் நம்பூதிரி இருமுடி கட்டு ஏந்தி கோயில் முன்புறம் வருவர். மாலை 6:30 மணிக்கு புதிய மேல்சாந்திகளுக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு அபிஷேகம் நடத்தி, ஐயப்பன் மூலமந்திரம் சொல்லிக்கொடுத்து கோயிலுக்கு அழைத்து செல்வார். வேறு விசேஷபூஜைகள் எதுவும் நடைபெறாது. இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.17-ம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு புதிய மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடைதிறந்ததும் இந்த ஆண்டுக்கான மண்டலகாலம் தொடங்கும். தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு ஐயப்பனுக்கு அபிஷேகம் நடத்தி பிரசாதம் வழங்கியதும், நெய்யபிஷேகம் தொடங்கும். அன்றிலிருந்து தொடர்ச்சியாக 41 நாட்களும் அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்து பூஜைகள் நடைபெறும். டிச., 27-ம் தேதி மண்டலபூஜை நடைபெறும்.
ஏற்பாடுகள் தயார்: மண்டல காலத்தில் வரும் பக்தர்களை வரவேற்க சன்னிதானம் தயாராகி விட்டது. பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு வசதி விரிவு படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கும் அறைகளையும் ஆன்லைனில் புக்கிங் செய்ய முடியும். கடந்த 15 நாட்களாக அப்பம் - அரவணை தயாரித்து ஸ்டாக் செய்யப்பட்டுள்ளது. 50 லட்சம் டின் அரவணை ஸ்டாக் செய்யப்பட்டுள்ளது. பாட்டில் குடிநீர் தடை செய்யப்பட்டுள்ளதால் ஆங்காங்கே பாதுகாக்கப்பட்ட குடிநீர் பிளான்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.பரிதாபத்தில் பம்பைஆனால் மழையில் உருக்குலைந்த பம்பையை சரி செய்ய முடியாமல் பரிதாபமாக காட்சி தருகிறது. கடைகள் இல்லை, போதுமான குடிநீர் வசதி இல்லை. குளிக்கலாம் ஆனால் கழிவறைகள் இல்லை. பம்பை மணல் பரப்பு கற்களால் நிரம்பியுள்ளது. இதனால் பம்பையில் பக்தர்கள் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. நிலக்கல் வந்து அங்கிருந்து கேரள அரசு பஸ்சில் வரவேண்டும். இதற்கும் ஆன்லைன் முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது.அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவால் போலீசுக்கு இது சவாலான சீசனாக அமைந்துள்ளது.