பதிவு செய்த நாள்
15
நவ
2018
12:11
நத்தம்: நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா நிறைவாக திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது.
கடந்த நவ.8 ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. முருக பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவங்கினர். அன்று முதல் அன்னதானம், கந்த சஷ்டி கவச பாராயணம், திருமுருகாற்றுப் படை வேள்வி, பக்தி இசை, சிவ பூஜை திருக்கோலம், சிவ உபதேச திருக்கோலம், அருணகிரியாருக்கு நடனக்காட்சி அருளல், வேல்வாங்கும் திருக்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் (நவம்., 13ல்) கிரிவலப் பாதையில் பள்ளி மாணவர்கள் சூரசம்ஹார நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர்.
தொடர்ந்து தெப்பக்குளத்தினர் தீர்த்தவாரி நடந்தது.விழாவின் நிறைவாக நேற்று (நவம்., 14ல்) முருகன், வள்ளி, தெய்வானை மலை மாற்றுதல், பாத பூஜை, மாங்கல்யம் அணிவிப்பு உள்ளிட்ட திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையடுத்து அன்னப்பாவாடை தரிசனம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.