பதிவு செய்த நாள்
15
நவ
2018
12:11
பாலக்காடு: பாலக்காடு அருகே கல்பாத்தியில், பிரசித்தி பெற்ற விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவிலின் தேர் திருவிழா, நேற்று துவங்கியது.நேற்று காலை, 8:30 மணியளவில், உபனிஷத் பாராயணம், வேத பாராயணம், 9:00 மணியளவில் விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமி திருக்கல்யாண உற்சவம், 10:15 மணியளவில் ரதாரோகணம் நடந்தன. விசாலாட்சி சமேத விஸ்வநாதர் சுவாமி, மூலவர்கள் கணபதி மற்றும் சுப்ரமணியர் தேரில் எழுந்தருள, வடம் பிடித்து துவக்கி வைக்கப்பட்டது. கல்பாத்தியின் நான்கு வீதிகளிலும் தேர் பவனி வந்தது; திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இரண்டாவது நாளான இன்று, மந்தக்கரை மகா கணபதி கோவில் தேர், திருவீதிகளில் வலம் வருகிறது. நாளை, பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள் திருத்தேரோட்டம், சாத்தப்புரம் பிரசன்ன கணபதி கோவில் தேரோட்டம் ஆகியவை நடக்கின்றன. மாலை 6:00 மணியளவில், விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் அருகே, ஆறு தேர்களின் சங்கமம் நடக்கிறது.