பதிவு செய்த நாள்
16
நவ
2018
11:11
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நவ., 23 மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.
விழா துவக்கமாக நேற்று முன் தினம் மாலை கோயில் அனுக்ஞை விநாயகர் முன் யாக பூஜைகளும், விசாக .கொறடு மண்டபத்தில் விஷப யாகம், வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. நேற்று காலை கொடிப்பட்டம் பல்லக்கில் வைத்து ரத வீதிகளில் எடுத்துச் செல்லப்பட்டு கோயில் கொடிக்கம்பத்தில் கட்டப்பட்டது. சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை கொடிக்கம்பம் முன் எழுந்தருளினர். சிவாச்சார்யார்கள் கொடியேற்றினர். பட்டு, மா இலை, தர்ப்பை புல் வைத்து கொடிக்கம்பத்தில் கட்டப்பட்டு, அடிப்பாகத்தில் பால் உட்பட பல்வகை திரவிய அபிஷேகங்கள் நடந்தது. திருவிழா நம்பியார் சிவாச்சார்யாருக்கு பரிவட்டம் கட்டப்பட்டது.
இன்று(நவ., 16) முதல் நவ., 23 வரை தினமும் காலை, இரவு பல்வேறு வாகனங்களிலும் சுவாமி, தெய்வானை வீதி உலா வருவர். நவ., 20 சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, 21 காலை கங்காளநாதர் சுவாமி புறப்பாடு, மாலை காமதேனு வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை வீதி உலா, நவ., 22 பட்டாபிஷேகம், 23 காலை தேரோட்டம், மாலை மலை மீது மகா தீபம், 24 தீர்த்த உற்ஸவம் நடக்கிறது.