பதிவு செய்த நாள்
17
நவ
2018
11:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், தீபத் திருவிழா, 23ம் தேதி, காலை, 4:00 மணிக்கு சுவாமி கருவறை எதிரில் பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும். பரணி தீபம், மகா தீபம் தரிசனம் செய்ய, சிறப்பு கட்டண தரிசன டிக்கெட் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி, பரணி தீப தரிசனத்துக்கு, 500 ரூபாய் கட்டணத்தில், 500 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும். மாலையில் நடைபெறும் மகா தீப தரிசனத்துக்கு, 500 ரூபாய் கட்டணத்தில், 1,000 டிக்கெட்கள், 600 ரூபாய் கட்டணத்தில், 100 டிக்கெட்கள் வழங்கப்படும். சிறப்பு கட்டண தரிசன டிக்கெட் பெற விரும்புவோர்,
www.arunachaleswarartemple.tnhrce.in என்ற இணையதளத்தில், 21ம் தேதி, காலை, 11:00 மணி முதல் பெற்றுக் கொள்ளலாம்.
ஆன்லைனில் டிக்கெட் பெற ஆதார் எண், மொபைல்போன் எண், இ -மெயில் முகவரி விபரம் தேவை. ஒரு ஆதார் அட்டைக்கு, ஒரு டிக்கெட் மட்டுமே பெற முடியும்.ஆன்லைனில் விபரங்களை பதிவு செய்ததும், மொபைல்போன் எண்ணுக்கு ரகசிய எண் - ஓ.டி.பி., வரும். அதை பதிவேற்றி, டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம். தரிசனத்துக்கு வரும் போது, ஆன்லைன் டிக்கெட் மற்றும் அசல் ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தீப திருவிழாவிற்கு சிறப்பு ரயில் இயக்கம்: திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, விழுப்புரம், வேலூரிலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இது குறித்து, தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, விழுப்புரத்திலிருந்து, திருவண்ணாமலைக்கு வரும், 22, 23ல், காலை, 10:00 மணிக்கும், இரவு, 10:00 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப் படுகின்றன. இதேபோல, மறு மார்க்கத்தில், திருவண்ணாமலையிலிருந்து, விழுப்புரத்துக்கு வரும், 22, 23ல், மதியம், 1:00 மணிக்கும், வரும், 23 மற்றும், 24ல், காலை, 4:15 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ஊர்களில் ரயில்கள் நின்று செல்லும். இதேபோல, வேலூரிலிருந்து, திருவண்ணாமலைக்கு வரும், 22, 23ல், இரவு, 9:30 மணிக்கும், மறு மார்க்கத்தில் திருவண்ணாமலையிலிருந்து, வேலூருக்கு வரும், 23, 24ல், காலை, 4:15 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.