ஆண்டிபட்டியில் வாழ்வில் பிரச்னைகள் தீர்க்கும் முனீஸ்வரன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2018 04:11
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியில் உருவம் இல்லாத முனீஸ்வரன் சுவாமிக்கு உருவம் கொடுத்து நூற்றாண்டுக்கும் மேலாக காவல் தெய்வமாக பக்தர்கள் வழிபாடுகின்றனர்.
சக்கம்பட்டி பகவதியம்மன் கோயில் முன்புறம் உள்ளது. தோப்பூர் முனீஸ்வரன் கோயில், சுவாமியின் காலடியில் எலுமிச்சை பழம் வைத்து தங்கள் வேண்டுதலை நினைத்தால் நிச்சயம் கைகூடும் என்ற நம்பிக்கை இன்றளவும் இப்பகுதி மக்களிடம் உள்ளது.
குழந்தை வரம், குடும்பத்தில் கணவன் மனைவியிடம் உள்ள தீராத பிரச்னைகள், பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேர வைத்தல் போன்றவற்றை முன்வைத்து, வழிபாடுகளை தொடர்கின்றனர்.
பக்தர்கள் கூறியதாவது: நூற்றாண்டுக்கு மேலாகவும் இந்த இடம் வழிபாட்டுத்தலமாக உள்ளது. கடந்த பல ஆண்டுக்கு முன் அடர்ந்த வனப்பகுதியாக இருந்துள்ளது. புளிய மரத்தின் வேர்ப்பகுதியில் இருந்த புற்று, அருகில் இருந்த கல் இவைதான் சுவாமியாக உருவகப்படுத்தி உள்ளனர். ஆடு, சேவல் பலியிட்டு, வெண்பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர். மரத்தின் அருகே பிராந்தி ஊற்றி சுருட்டு வைத்தும் வழிபாடு செய்கின்றனர்.
சுவாமியாக வழிபடும் கல்லில் உடுக்கை மற்றும் கயிறு போன்ற படங்கள் வரையப் பட்டுள்ளன. கோயிலில் வழிபாடு செய்வதால் பெண்கள், கர்ப்பிணிகளுக்கு தீய சக்திகளால் பாதிப்பு வராது என்ற நம்பிக்கையும் உள்ளது.
தவறான நோக்கத்துக்காக வழிபாடு, பிரார்த்தனை செய்தால் அதற்கான தண்டனையை சுவாமி நிச்சயம் கொடுத்து விடுவார்.கடந்த சில ஆண்டாக பக்தர்களால் ஆடி மாதம் முதல் தேதியில் விழா எடுத்து சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது., என்றார்.