பதிவு செய்த நாள்
19
நவ
2018
11:11
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், மகா தீபம் ஏற்றப்படவுள்ள, மகா தீப கொப்பரை புதுப்பிக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் கார்த்திகை தீப திருவிழாவில், 23ல், காலை, 4:00 மணிக்கு, பரணி தீபம்; மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில், மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக, 5 அடி உயரமுள்ள ராட்சத கொப்பரை புதுப்பிக்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கொப்பரையில், தீபம் ஏற்றும் போது வெப்பத்தால் சேதமடையாமல் இருக்க, மேல்பாகம், மூன்றே முக்கால் அடி, கீழ்பாகம், 2.75 அடி சுற்றளவு கொண்டவாறு, 150 கிலோ எடையில், 20 வளைய ராடுடன் கூடிய செப்பு தகட்டில் செய்யப்பட்டுள்ளது.மேலும், கொப்பரையை மலை உச்சிக்கு எடுத்து செல்ல வசதியாக, மேல் மற்றும் கீழ்பாகத்தில், தலா, நான்கு வளையங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை புதுப்பிக்கப்பட்டு, காவி நிற வண்ணம் பூசப்பட்டு, ஓம் நமசிவாய என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.தீப விளக்கில், அர்த்தநாரீஸ்வரர் உருவாய் எழுவது போலவும், அதன் பின்புறம் சிவபெருமான் அக்னி பிழம்பாய் எழந்தருளி காட்சி தருவது போன்று படம் வரையப்பட்டு, கொப்பரை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று, கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.வரும், 22ல், மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படும் என, அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர்.