பதிவு செய்த நாள்
19
நவ
2018
11:11
சபரிமலை : சபரிமலையில் நேற்று நள்ளிரவில் அய்யப்ப பக்தர்கள் 80 பேரை போலீசார் கைது செய்து, அங்கிருந்து வெளியேற்றி உள்ளனர்.
அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவிற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வருவதால் சபரிமலை அய்யப்பன் கோயிலில் சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் 18 ம் படிக்கு அருகே நடைபந்தல் பகுதியில் பக்தர்கள் சிலர் தங்க முயன்றுள்ளனர். ஆனால் போலீசார் அவர்களை வெளியேறும்படி அறிவுறுத்தினர்.
போலீசாரின் இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து அவர்கள் அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பக்தர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து, வெளியேற்றினர். இது குறித்து மலப்புரம் எஸ்.பி., சதீஷ்குமார் கூறுகையில், போலீசார் பக்தர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. சன்னிதானம் பகுதியில் 144 தடை அமலில் உள்ள நிலையில் அவர்கள் அங்கு தங்க முற்பட்டனர். இதனால் வேறு வழியின்றி அவர்களை கைது செய்தோம். ஹரிவராசனம் பாடப்பட்ட பிறகு அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறினோம். ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர். பக்தர்கள் அவர்கள் விருப்பம் போல் வழிபாடு நடத்தி விட்டு செல்லலாம். அதே சமயம் விதிகளை மீறக் கூடாது. வன்முறை சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்கவே 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
பக்தர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அதிக அளவிலான பா.ஜ., மற்றும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதல்வர் பினராயி விஜயனின் வீடு, கொச்சி, கொல்லம், ஆலப்புழா, தொடுபுழா, மலப்புரம், இடுக்கி, திருச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.