பதிவு செய்த நாள்
20
நவ
2018
11:11
சபரிமலை : சபரிமலை கோவில் வளாகத்தில் இருந்த, 68 பேரை, கேரள போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவில் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள் சார்பில், முதல்வரின் இல்லம் உட்பட, கேரளா முழுவதும் போராட்டம் நடந்தது. கேரளாவில், மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி அரசு அமைந்துஉள்ளது.
தீர்ப்பு: இங்கு, சபரிமலையில் உள்ள, அய்யப்பன் கோவிலுக்கு, அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.இது கோவிலின் பாரம்பரியத்துக்கு எதிரானது என, பல அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைகளுக்காக, அய்யப்பன் கோவிலின் நடை திறக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு, 10 - 50 வயதுள்ள பெண்கள் வருவதை, ஹிந்து அமைப்புகள் தடுத்து வருகின்றன. இந்நிலையில், சபரிமலை அய்யப்பன் கோவில் வளாகத்தில் திரண்டிருந்த, 68 பேரை, கேரள போலீசார், நேற்று முன்தினம் இரவு திடீரென கைது செய்தனர். அவர்கள் மணியாறு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாக, போலீசார் தெரிவித்தனர்.நள்ளிரவில் கைது செய்ததைக் கண்டித்து, பா.ஜ., யுவ மோர்ச்சா உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் நேற்று, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டன. திருவனந்தபுரத்தில், முதல்வரின் இல்லத்துக்கு எதிரே, சாலையில் அமர்ந்தும், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆய்வு: இதற்கிடையே, சபரிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள முகாமான, நிலக்கல்லில், மத்திய கலாசாரத் துறை இணை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அல்போன்ஸ், அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.சபரிமலையில் போதிய வசதிகள் செய்யப் படவில்லை, என, அவர் குற்றம் சாட்டினார்.அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பைத் தொடர்ந்து, சபரிமலையில், இரண்டு மாதங்களாக, மாதாந்திர பூஜைகளுக்காக நடை திறந்த.போது பதற்றம் ஏற்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுஉள்ள மனுக்கள் மீது, அடுத்தாண்டு, ஜன., 22ல் விசாரிக்கப்படும் என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.இதற்கிடையே, பக்தர்களிடம், கேரள போலீசார் கெடுபிடியுடன் நடந்து கொள்வதற்கு, கேரள உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
அவகாசம் கோரி மனு!
சபரிமலையில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்கள் மீதான விசாரணை, அடுத்த ஆண்டு, ஜன., 22ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அய்யப்பன் கோவிலை நிர்வகிக்கும், திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் நேற்று,புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது: அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் மனுவை, உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. அதனால், ஏற்கனவே அளித்த தீர்ப்பை செயல்படுத்துவதற்கு, கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும். சமீபத்தில் மழை பெய்ததால், ஏற்பட்ட வெள்ளத்தால், சபரிமலையில் பலத்த சேதம் அடைந்துள்ளது. பக்தர்களுக்கு போதிய, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை செய்வதற்கு, அவகாசம் தேவைப்படுகிறது. அதனால், தீர்ப்பை செயல்படுத்த அவகாசம் அளிக்க வேண்டும். இவவாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, சபரிமலை விவகாரம் தொடர்பான வழக்கை அவசர அவசரமாக விசாரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
பக்தர்கள் அல்ல!
கைது செய்யப்பட்டவர்கள் அய்யப்ப பக்தர்கள் அல்ல. பிரச்னை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு வந்துள்ள, ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள். சபரிமலையில் பிரச்னைகள் ஏற்பட அனுமதிக்க மாட்டோம். -பினராயி விஜயன், கேரள முதல்வர், மார்க்சிஸ்ட்
ஆர்.எஸ்.எஸ்.,க்கு உதவி: அய்யப்ப பக்தர்களை, ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் என, முதல்வர் முத்திரை குத்தியுள்ளார். இதன் மூலம், அந்த அமைப்புக்கான ஆதரவு பெருகுவதற்கு உதவி செய்கிறார். -ரமஷே் சென்னிதலா, கேரள எதிர்க்கட்சித் தலைவர், காங்.,
போர்க்களம் ஆக்குகிறது!
சபரிமலை அய்யப்பன் கோவில் வளாகத்தை, போர்க்களமாக்கும் முயற்சியில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது. அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல; பக்தர்கள். சபரிமலையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் என்ன? -கே.ஜே.அல்போன்ஸ், மத்திய கலாசார துறை இணை அமைச்சர், பா.ஜ.,