பதிவு செய்த நாள்
20
நவ
2018
12:11
மேட்டுப்பாளையம்:வன பத்ரகாளியம்மன் கோவிலில், மீண்டும் மகா மண்டபம் கட்டும் பணியை விரைந்து துவக்க வேண்டுமென, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். உண்டியல் காணிக்கை, கடை ஏலம் மூலம் ஆண்டுக்கு, ஏழு கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. மகா மண்டபத்தில், சிம்ம வாகன சிலை அருகே பெண்கள் எலுமிச்சம்பழம் தீபம் ஏற்றுவது வழக்கம். இம்மண்டபத்தின் மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டிருந்தது.
இதை ஆய்வு செய்த, கோவை அரசு பொறியியல் கல்லுாரி பேராசிரியர்கள் குழுவினர், பக்தர்கள் பாதுகாப்பு கருதி, மண்டபத்தை இடிக்க வலியுறுத்தினர். அதன்படி, மகா மண்டபத்தின் மேற்கூரை கடந்த மே மாதம் இடிக்கப்பட்டது. மீண்டும் புதிதாக கட்டாததால், தீபம் ஏற்ற இடமின்றி, பக்தர்கள் வேதனை அடைகின்றனர்.கோவில் உதவி கமிஷனர் ராமு கூறுகையில், மகா மண்டபத்தில், 16 துாண்கள் உள்ளன. அவற்றையும் இடித்து விட்டு, 42 அடி அகலம், 58 அடி நீளத்தில் புதிதாக மகா மண்டபம் விரைவில் கட்டப்படும். திட்ட மதிப்பீடு தயாரித்து, துறை அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும், பணிகள் துவக்கப்படும், என்றார்.