பதிவு செய்த நாள்
25
நவ
2018
01:11
விழுப்புரம்:விழுப்புரம் அருகே, பல்லவர் கால மூத்த தேவி சிற்பம் மற்றும் நாயக்கர் கால சதிக்கற்கள் கண்டு அறியப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்ட அருங்காட்சியகம் அமைப்பு -கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர், செங்குட்டுவன், பாபு உள்ளிட்டோர், விழுப்புரம் அடுத்த பேரணி அருகே உள்ள, செ.கொத்தமங்கலம் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, ஒரு கட்டடத்தில் வைக்கப்பட்டு, துர்க்கை என வழிபட்டுவரும் சிற்பத்தை பார்வையிட்டனர். அது, பல்லவர் கால, மூத்த தேவி சிற்பம் எனக் கண்டறியப்பட்டது.
மேலும், திரவுபதி அம்மன் கோவில் தெருவில், தேர் முட்டிக் கல்லாகவும், சக்திவேல் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் சாமிக் கல்லாகவும் வணங்கப்பட்டு வரும் பலகைக் கற்களும் பார்வையிடப்பட்டன. இவற்றில், கைகளில் வாள் மற்றும் கேடயத்துடன் நிற்கும் ஆண், அதன் அருகில் பெண் உருவங்கள் காணப்பட்டன. இவை, கி.பி., 14 - 15ம் நுாற்றாண்டு, நாயக்கர் கால சதிக்கற்கள் என, தெரிய வந்துள்ளன. இதுபற்றி, செங்குட்டுவன் கூறியதாவது:தமிழகத்தில், தவ்வை, மூத்தோள், மூதேவி, ஸேஷ்டா எனப்படும் மூத்த தேவி வழிபாடு, மிகவும் தொன்மையானது. குறிப்பாக, பல்லவர் காலத்திலும், அவர்களைத் தொடர்ந்து சோழர் காலத்திலும், இவ்வழிபாடு சிறந்தோங்கி இருந்தது.விழுப்புரம் அடுத்த, செ.கொத்தமங்கலம் கிராமத்தில், பழமையான சிவாலயம் இருந்து, காலப்போக்கில் அது மறைந்துள்ளது.
அங்கு வழிபட்டு வரப்பட்ட, மூத்த தேவி சிற்பம், வயல்வெளியில் இருந்து உள்ளது. அண்மைக் காலத்தில், இச்சிற்பம், மண்டபம் ஒன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, வழிபடப்பட்டு வருகிறது.போரில், வீரன் இறந்துவிட்டால், அவனுடன் அவன் துணைவியரும் தீயில் இறங்கி உயிரை மாய்த்துக் கொள்ளும் உடன்கட்டையேறுதல் எனும் நிகழ்வும், தமிழகத்தில் நடைமுறையில் இருந்துள்ளது. இவ்வாறு, உயிரிழந்த வீரன், அவனுடன் உயிரை மாய்த்துக் கொண்ட பெண்களுக்கு நினைவுக் கல் எடுப்பது வழக்கம். இக்கற்கள், சதிக்கற்கள் எனப்படும்.இதுபோன்ற சதிக்கற்கள், செ.கொத்தமங்கலம் கிராமத்தில் கிடைத்துள்ளது, சிறப்பிற்கு உரியது.பல்லவர் கால, மூத்தோள் சிற்பம், நாயக்கர் கால, சதிக்கற்கள் மூலம், செ.கொத்தமங்கலம் கிராமத்தின் பழமையை, நம்மால் உணர முடிகிறது.மேலும், இப்பகுதியில் மேற்பரப்பாய்வும், அகழாய்வும் மேற்கொள்ளப்பட்டால், இந்தக் கிராமத்தின் தொன்மை நமக்குத் தெரியவரும்.இவ்வாறு அவர் கூறினார்.