கோவை மாவட்டம், காரமடையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது மருதூர் கிராமம். இங்கு பழைமை வாய்ந்த அனுமந்தராயசாமி திருக்கோயில் அமைந்துள்ளது. மூலவர் அனுமந்தராயசாமி, ராமபிரானின் பக்தராக கரம் குவித்து வணங்கும் பக்த ஆஞ்சநேயராகக் கருவறையில் காட்சி தருகிறார். தன்னை வணங்கும் பக்தர்களின் காரியங்கள் அனைத்தையும் ஜயமாக்குவதால் இவருக்கு, ‘ஜயமங்கள ஆஞ்சநேயர்’ என்ற திருநாமம். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இக்கோயில் ஆஞ்சநேயரை வணங்கி வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். இத்தலத்தில் ஒவ்வொரு தமிழ் மாத முதல் சனிக்கிழமையன்றும் சிறப்புப் பூஜைகள் விமரிசையாக நடைபெறுகின்றன. அன்றைய தினம் பக்திச் சொற்பொழிவும் சிறப்பாக நடைபெறுகிறது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்த, பின்னர் விசேஷ அலங்காரத்தில் அனுமந்தராயசாமி சேவை சாதிப்பார். ‘வணங்கியவர் வாழ்வில் மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் தந்தருளும் மருதூர் மாருதிராயன்’ என இத்தலம் வந்து சேவித்த பக்தர்கள் பக்திச் சிலிர்ப்புடன் கூறுகின்றனர். ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலை எட்டு மணிக்கு மேல் மூலவருக்குச் சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது. மூல நட்சத்திர நாளில் அஞ்சனை மைந்தனுக்கு வெண்ணெய் சாத்தியோ, வெற்றிலை மாலை அணிவித்தோ, துளசி மாலை வழங்கியோ வணங்கினால் எதிர்ப்பையெல்லாம் தவிடுபொடியாக்குவார் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். புளியோதரை அல்லது தயிர்சாதம் அன்னதானமாக வழங்கலாம். உங்களின் எல்லாக் காரியங்களிலும் பக்கபலமாக இருந்து காத்தருள்வார் ராமபக்தன்.