பதிவு செய்த நாள்
03
டிச
2018
12:12
திருவனந்தபுரம்: கேரளாவில், சபரிமலை அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும், உச்ச நீதிமன்ற உத்தரவு தொடர்பாக, அரசின் நிலைப்பாட்டிற்கு ஆதரவை திரட்டும் வகையில், 600 கி.மீ., நீள, பெண்கள் சுவர் அமைக்க, முதல்வர் பினராயி விஜயன் திட்டமிட்டுள்ளார்.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது
பெண்களை அனுமதிக்கலாம் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து, பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அய்யப்பன் கோவிலுக்கு செல்ல வரும் பெண்களை, பக்தர்கள் மற்றும், பா.ஜ.,வினர் திருப்பி அனுப்பி வருகின்றனர்.உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் வகையில், மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள், பா.ஜ., போராட்டத்தால் தோல்வியில் முடிந்து வருகின்றன.இந்நிலையில், தங்கள் போராட்டத்தை இன்று (டிசம்., 3ல்) முதல் தீவிரப்படுத்த, பா.ஜ., முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, மாநில, பா.ஜ., தலைவர், பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை கூறியதாவது:அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.
சபரிமலையில், மாநில அரசு பிறப்பித்துள்ள தடை உத்தரவுகள் விலக்கப்பட வேண்டும்.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைமைச் செயலகம் முன், இன்று (டிசம்., 3ல்) முதல்,
காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்கு, மக்களிடம் ஆதரவு திரட்ட, மாநில அரசு முயன்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, 150 சமூக அமைப்புகளுக்கு, சிறப்பு கூட்டத்தில் பங்கேற்கும்படி, முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்தார். இந்த கூட்டத்தில், ஹிந்து ஈழவா சமூகத்தவரின், ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் அமைப்பு பொது செயலர் வெல்லபள்ளி நடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்ட, ஹிந்து நாயர் சேவை சங்கம் சார்பாக, யாரும் வரவில்லை.
கூட்டத்தின் முடிவில், முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:அய்யப்பன் கோவில் விவகாரத்தில், மக்களிடம் ஆதரவு திரட்டும் நோக்கில், பெண்கள் சுவர் அமைக்க
திட்டமிட்டுள்ளோம். காசர்கோடு மாவட்டம் முதல், திருவனந்தபுரம் வரை, 600 கி.மீ., நீளத்துக்கு பெண்களை வரிசையாக நிறுத்தி, பெண்கள் சுவர் அமைக்க உள்ளோம்.
அரசின் நடவடிக்கைகளுக்கு, பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, சபரிமலை விவகாரம் குறித்து ஆய்வு செய்ய, பா.ஜ., மேலிடத்தால் நியமிக்கப்பட்ட நால்வர் குழு, நேற்று (டிசம்., 2ல்) கொச்சி வந்தது.
இவர்கள், அங்குள்ள, பா.ஜ., தலைவர்களுடன் இதுகுறித்து தீவிர ஆலோசனை நடத்தினர்.
பக்தர் வருகையை அதிகரிக்கதேவசம் போர்டு திட்டம் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக நடந்து வரும் போராட்டங்களால், பக்தர்கள் வருகை கணிசமாக குறைந்துஉள்ளது. இதையடுத்து, பக்தர்கள் வருகையை அதிகரிக்கும் நோக்கில், திரைப்பட நடிகர்களை வைத்து, விளம்பரங்களை தயாரித்து வெளியிட, திருவாங்கூர் தேவசம்
போர்டு திட்டமிட்டுள்ளது. போராட்டம் காரணமாக, அய்யப்பன் கோவிலுக்கு வர தயங்கும் பக்தர்களின் பயத்தை போக்கும் வகையில், இந்த விளம்பரங்கள் இருக்கும் என, தெரிகிறது. இது தொடர்பான இறுதி முடிவு, இன்று (டிசம்., 3ல்) எடுக்கப்படும் என, தேவசம் போர்டு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.