பதிவு செய்த நாள்
04
டிச
2018
12:12
மாமல்லபுரம்: வாயலூர் திருப்புலீஸ்வரர் கோவில் வளாகத்தை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.
கல்பாக்கம் அடுத்த, வாயலூரில், திருப்புலீஸ்வரர் கோவில் உள்ளது. கி.பி., 8ம் நூற்றாண்டு, பல்லவர் காலத்தில், இக் கோவில் கட்டப்பட்டது. திருப்புலீஸ்வரர், அங்கயற் கண்ணி, விநாயகர், முருகர், வைகுண்டபெருமாள் சன்னிதிகள் உள்ளன.இச்சூழலில், பல ஆண்டு களுக்கு முன், கோவிலுக்கு சொந்தமாக, பல ஏக்கர் நிலம் இருந்ததாகவும், நாளடைவில், தனியார் அபகரித்ததாகவும், இப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
தற்போது, கோவில் வளாக பாதுகாப்பிற்கு சுற்றுச்சுவர் இன்றி, வளாகத்தில் புதர் சூழ்ந்துள்ளது. இப்பகுதியினர், மது அருந்தி சீரழிக்கின்றனர்.இதுகுறித்து, மாமல்லபுரம், தொல்லியல் பராமரிப்பு அலுவலர் பரணிதரன் கூறும்போது, கோவிலின் சன்னிதி பகுதியில், கருங்கல் நடைபாதை அமைக்கிறோம். பாதுகாப்பு தடுப்பு கம்பி அமைத்து, முழு வளாகத்தையும் பராமரித்து மேம்படுத்துவோம், என்றார்.