இந்த உலகம் பணத்தை தேடி ஓடுகிறது. பணத்தின் மீது பாசம் வைப்பது இன்பமாகத் தான் தெரியும். ஆனால், மறுமை நாளில் இந்த ஆசை நரகத்தில் தள்ளிவிடும். நபிகள் நாயகம் இதுபற்றி, ”மறுமைநாளில் இறைவன் முன்னிலையில் மனிதன் கொண்டு வரப்படும் போது, பலவீனம், அவமானம் காரணமாக அவன் ஆட்டுக்குட்டியாக அடங்கி இருப்பான். பிறகு இறைவன் புறத்தில் இருந்து, ’நான் உனக்கு செல்வத்தை அள்ளித்தந்து உனக்கு பல பேருதவிகளை செய்தேனே. அவற்றில் நீ எப்படி செயல்பட்டாய்?’என கேள்வி கேட்கப்படும். அதற்கு அவன், ’இறைவா! நான் செல்வம் தேடியதோடு அதைப் பன்மடங்காகப் பெருக்கி உலகிலேயே விட்டு வந்து விட்டேன். மீண்டும் பூமிக்கு அனுப்பினால் எடுத்துக் கொண்டு வருவேன்’ எனக் கூறுவான்.
’சரி...நீ மறுமைக்காக என்ன அனுப்பி வைத்தாய்? அதைக் காட்டு,” என்று அடுத்த கேள்வி கேட்கப்படும். அதற்கும் அவன் முந்தைய பதிலையே கூறுவான். இந்நிலையில் நரகத்தில் தள்ளப்படுவான்,” என்கிறார். பூமியில் வாழும் போது மட்டுமல்ல, மரணத்திற்குப் பின்னும் மனிதன் பணத்தைப் பற்றியே பேசுகிறான். பணம் தவிர அவனுக்கு வேறு சிந்தனை இல்லை. சொர்க்கத்தில் வாழ விரும்பினால் பூமியில் இறைவனால் கொடுக்கப்பட்ட பணம் மற்றும் வசதிகள் மூலம் பிறருக்கு நன்மை செய்திருக்க வேண்டும். யாருக்காவது ஒருவேளை உணவு, ஏழை மாணவனுக்கு ஒரு நோட்டு புத்தகம், குறைந்த பட்சம் ஒரு டம்ளர் தண்ணீராவது தானம் கொடுத்தால் சொர்க்கத்தில் மகிழ்ச்சியுடன் வாழலாம்.