பதிவு செய்த நாள்
06
டிச
2018
12:12
விழுப்புரம்: ஒரத்தூர் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விக்கிரவாண்டி அடுத்த ஒரத்தூரில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ., தூய பேதுரு தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
காலை 6.00 மணிக்கு கிராம பொதுமக்கள் சிலுவை கொடியை ஏந்திக்கொண்டு முக்கிய வீதி கள் வழியாக தேவாலய பாடல்களை பாடிக்கொண்டு, ஆலயத்திற்கு வந்தனர். பின், குருசேகர ஆயர் ஆப்ரகாம் ஆசைதம்பி தலைமையில் பொதுமக்கள் சிறப்பு திருப்பலி செய்தனர். தொடர்ந்து ஆயர் சதீஷ் சாமுவேல் அருளுரை வழங்கினார்.
பின்னர், திருவிருந்து மற்றும் திடப்படுத்தல் ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து, தேவாலயத்தில் தினந்தோறும் திருப்பலி நிகழ்ச்சிகளும், 25ம் தேதி கிறிஸ்து அரசர் குடிலில் பிறக்கும் நிகழ்ச்சியும், சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெறுகிறது.
துவக்க விழா நிகழ்ச்சியில், உபதேசியார் சாமுவேல், செயலர் சேகர், பொருளாளர் சாமிதாஸ், குருசேகர செயலர் விக்டர் ஜெபதுரை, உபதேசியார் விக்டர் ஜெபதேவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.