பதிவு செய்த நாள்
06
டிச
2018
01:12
திருவனந்தபுரம்: கேரள மாநிலம், சபரிமலையில் நடக்கும் போராட்டங்களில், குழந்தைகளை கேடய மாக பயன்படுத்துவோர் மீது, மாநில அரசு நடவடிக்கை எடுக்கும், என, அம்மாநில சமூக நல துறை அமைச்சர், கே.கே. சைலஜா எச்சரித்து உள்ளார். கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. நேற்று நடந்த மாநில சட்டசபை கூட்டத்தில், சபரிமலைய அய்யப்பன் கோவிலில் நடக்கும் போராட்டங்களில், குழந்தைகளை கேடயமாக பயன்படுத்தும் போக்கு குறித்து, சமூக நலத் துறை அமைச்சர் சைலஜா கூறியதாவது: சபரிமலையில், பக்தர்களும், ஹிந்து ஆதரவு அமைப்பைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதில், குழந்தைகளை கேடயமாக பயன்படுத்தினர்.இது தவிர, மாநிலத்தில் நடந்த பல போராட்டங்களில், குழந்தைகள் கேடயமாக பயன்படுத்தப்பட்டனர்.
சமீபகாலமாக, பெற்றோருடன் சபரிமலைக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடவுள் பக்தியுடன் குழந்தைகளை அழைத்து வருவது தவறல்ல. ஆனால், போராட்டங்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவது, அவர்களின் உரிமைகளுக்கு எதிரானது. எனவே, போராட்டங்களுக்கு குழந்தைகளை பயன்படுத்துவோர் மீது, மாநில அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.