பதிவு செய்த நாள்
08
டிச
2018
12:12
தஞ்சாவூர், கும்பகோணம் அருகே திருமாந்துறையில், யோகநாயகி அம்பாள் சமேத அட்சயநாத சுவாமி கோவிலில் உள்ள, சந்திர தீர்த்தக் கிணற்றில் திடீரென தண்ணீர் பொங்கி ஆர்ப்பரித்து வந்ததைக் கண்டு, பக்தர்கள் பரவசமடைந்தனர்.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருமாந்துறையில், யோகநாயகி அம்பாள் சமேத அட்சயநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
திருவாவடுதுறை ஆதினத்திற்குச் சொந்தமான இக்கோவில், ரோகிணி நட்சத்திரத்திற்கும், விருச்சிக ராசிக்கும் உரிய பரிகாரத் தலமாகும்.காலமா முனிவருக்கும், நவக்கிரகங்களுக்கும் தொழு நோய் ஏற்பட்டதால், தங்களது ரோக நிவர்த்திக்காக, திருமாந்துறை வெள்ளெறுக்குக் காட்டில், பூஜை செய்து, 15 தினங்கள் சந்திரக் கிணறு தீர்த்தத்தில் நீராடி, உடல் நோய் நீங்கி, மனக்குறை அகன்றதாக தல வரலாறு கூறுகிறது.இதனருகே, சூரியனார் கோவில் உள்ளது. காலமா முனிவரும், நவக்கிரகங்களும், சூரியனார் கோவிலில் தங்கியிருந்து, திருமாந்துறை அட்சயநாத சுவாமியைத் தரிசித்து நலம் அடைந்தார்கள் என்பதால், நலமுடன் குறையில்லாமல் வாழ, திருமாந்துறை அட்சயநாத சுவாமியைத் தரிசித்த பின், சூரியனார் கோவில் சென்று வழிபடுவது, இன்றைக்கும் வழக்கமாக இருக்கிறது.அட்சயநாதர் கோவிலுக்குள் அரை சந்திர வடிவில், சந்திர தீர்த்தக் கிணறு அமைந்திருக்கிறது. இதில், வளர்பிறை நாட்களில் தண்ணீர் அதிகரிப்பதும், தேய்பிறை நாட்களில் தண்ணீர் குறைவதும் காலங்காலமாக நடைபெறுவது நிகழ்வாகும்.இந்நிலையில் நேற்று முன்தினம் கார்த்திகை அமாவாசை நாளில், திடீரென சந்திர தீர்த்தத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து பொங்கி வழிந்தது. இதைப் பார்த்து, பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.இதுபற்றி, ராஜி சிவாச்சியார் கூறியதாவது:எப்போதும், அமாவாசை நாளில், சந்திரக் கிணற்றில் தண்ணீர் ரொம்பவும் கீழேதான் இருக்கும். ஆனால், நேற்று முன்தினம், அபிஷேகத்திற்கு தண்ணீர் எடுக்கப் போனபோது, மேலே ததும்பி வழிந்தது. இதைக் கண்ட பக்தர்கள் புனித நீராட ஆரம்பித்து விட்டார்கள். இதுபற்றி, திருவாவடுதுறை ஆதினத்திற்கு தகவல் அனுப்பினேன். அவர்களும் வருகை வந்து, புனித நீராடி சிறப்பு பூஜைகள் செய்தார்கள். காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடியும், நேற்றும் அமாவாசை இருந்த போதும், சந்திரக் கிணற்றில் தண்ணீர் குறையவில்லை என்பது ஆச்சரியம்.இவ்வாறு அவர் கூறினார்.