சபரிமலை: சபரிமலையில் தந்திரி தேவசம்போர்டின் ஒரு ஊழியர் மட்டும்தான், என தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியதற்கு கேரள தந்திர வித்யாபீட பொறுப்பு அதிகாரி அக்கீரமண் காளிதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கேரள சட்டசபையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், திருவிதாங்கூர் தேவசம்போர்டின் ஆறாயிரம் ஊழியர்களில் ஒருவர் தந்திரி. தேவசம்போர்டு சட்டத்திட்டங்களில் இது தெளிவாக கூறப்பட்டுள்ளது. மற்ற ஊழியர்களை போல இவரும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டவர். பூஜை விஷயங்களில் மட்டுமே இவர் முடிவுகள் எடுக்க முடியும். நிர்வாக விஷயங்களில் தலையிட முடியாது என கூறியிருந்தார்.இதற்கு கேரள வேதபாடசாலையான தந்திர வித்யாபீட பொறுப்பு அதிகாரி அக்கீரமண் காளிதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:அமைச்சர் தவறான தகவல் கொடுத்துள்ளார். இது பக்தர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும். தந்திரி தேவசம்போர்டு ஊழியர் அல்ல. சாஸ்திர விதிப்படி கோயிலில் பூஜை தொடர்பான விஷயங்களையும், ஆசாரங்களிலும் இறுதி முடிவு எடுக்க வேண்டியது தந்திரிதான்.பயண செலவும், கர்மங்கள் செய்வதற்குரிய தட்சணையும் மட்டுமே தந்திரிக்கு கொடுக்கப்படுகிறது. சம்பளமோ, தொழிலாளர் வைப்பு நிதியோ, ஓய்வூதியமோ கிடையாது. அவர் தேவசம்போர்டு ஊழியர் இல்லை. தந்திரிகளை தேவசம்போர்டோ, அரசோ நியமனம் செய்வதில்லை. தந்திரிகளை அவமதிக்கும் போக்கை மார்க்சிஸ்ட் அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.