பதிவு செய்த நாள்
08
டிச
2018
03:12
திருப்பூர்:இந்து முன்னணி நடத்தும் சோடஷ மகாலட்சுமி யாகத்துக்கு மகாலட்சுமி சிலை பிரதிஷ்டை நாளை (டிசம்., 8ல்)நடைபெறவுள்ளது.இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாவட்டம், பொங்கலூரில் வரும் 23ம் தேதி முதல் மூன்று நாள் சோடஷ மகாலட்சுமி மகா யாகம், கஜபூஜை, அஸ்வ மேத பூஜை மற்றும் கோமாதா பூஜை ஆகியன நடத்த திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.
இந்து முன்னணி மாநில செயலாளர் கிேஷார் குமார் கூறியதாவது:மகா யாகத்துக்காக சந்தன காப்பு அலங்காரத்தில் மகாலட்சுமியின் மூலவர் சிலையும், அபிஷேக வழிபாட்டுக்காக ஐம்பொன்னால் செய்த உற்சவர் சிலையும் அமைக்கப்படுகிறது.
நாளை, 9ம் தேதி காலை 9:00 மணிக்கு இவை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. பொங்கலூர் மாகாளியம்மன் கோவிலிலிருந்து 1,008 பெண்கள் தீர்த்தக் குடம் எடுத்து வந்து உற்சவருக்கு அபிஷேகம் நடத்தப்படும்.யாக பூஜை நிறைவடையும் வரை தினமும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தீர்த்தக் குடம் எடுத்து வந்து உற்சவருக்கு அபிஷேகம் நடைபெறும்.
இந்த மஞ்சள் அபிஷேகத்தை பக்தர்கள் நேரடியாக செய்யலாம்.யாக பூஜை நிகழ்வில் பங்கேற்க பதிவு செய்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. மேலும் அஸ்வ மேத பூஜைக்கு இதுவரை 140 குதிரைகளும், கோமாதா பூஜைக்கு 1,480 நாட்டு பசு மாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் வகையில் மொத்தம் 4,500 பேர் அடங்கிய 40 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பூஜை வாரியாக வரவேற்புகுழு, அன்னதானக் குழு, உபசரிப்பு குழு, பிரசாதம் வினிேயாக குழு, தகவல் தொடர்பு குழு, போக்குவரத்து குழு, அரசு துறை ஒருங்கிணைப்பு குழு என அனைத்து பணிகளுக்கும் குழுக்கள் அமைத்து, பொறுப்பு வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் தெரிவித்தார்.