சபரிமலை: சபரிமலையில் நிலைமையை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட மூவர் குழு, கேரள உயர்நீதிமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல் செய்கிறது. இதன்படி அரசுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால், மண்டலகால தொடக்கம் முதல் அசாதாரண சூழ்நிலை நிலவியது. சன்னிதானத்திலும் போராட்டம் நடந்ததால் துவக்கம் முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சன்னிதானத்தில் பஜனை போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது. இதனால் சரணகோஷம் போடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.இதையடுத்து சபரிமலை நிலைமையை ஆய்வு செய்ய மூவர் குழுவை உயர்நீதிமன்றம் நியமித்தது. ஓய்வு பெற்ற நீதிபதிகள் பி.ஆர்.ராமன், எஸ்.சிரிஜெகன், ஓய்வு பெற்ற டி.ஜி.பி. ஹேமச்சந்திரன் இடம் பெற்றனர்.இவர்கள் நிலக்கல், பம்பை, சன்னிதானத்தில் ஆய்வு செய்தனர்.அப்போது சன்னிதானம், நிலக்கல்லில் பக்தர்களுக்கான வசதிகள் குறித்து திருப்தி தெரிவித்தனர். பம்பையில் சில பிரச்னைகள் உள்ளன. அது பெருமழையால் ஏற்பட்டது என தெரிவித்தனர்.நேற்று முன்தினம் கொச்சியில் ஆலோசனை நடத்தி அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுத்தனர். இந்த அறிக்கை நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.