பதிவு செய்த நாள்
10
டிச
2018
11:12
மயிலாடுதுறை:குத்தாலத்தில், நடைபெற்ற கடைஞாயிறு தீர்த்தவாரி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம் குத்தாலத்தில், கார்த்திகை மாத கடைசி ஞாயிற்று கிழமையான நேற்று, தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. உக்தவேதீஸ்வரர், காளீஸ்வரர், சோழீஸ்வரர், மன்மதீஸ்வரர், ஆதிகேசவ பெருமாள் ஆகிய கோயில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் மங்கள வாதியங்கள் முழங்க, வீதி உலா வந்து, காவிரி தீர்த்த படித்துறையில் எழுந்தருளினர்.அங்கு, அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.வித்துன்மாலி என்ற அரக்கன், சிவபெருமான் அருளால் சூரியனைப் போல ஒளிபடைத்த கிரகமாக மாறியதால், சூரியனால், பூமிக்கு ஒளி வழங்க முடியாமல் போனது. இதையடுத்து, சூரிய பகவான் குத்தாலத்தில் தவம் இருந்து, சிவபெருமான் அருள் பெற்றார் என்பதன் ஐதீகமாக, கடைஞாயிறு தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது.