பதிவு செய்த நாள்
11
டிச
2018
12:12
‘சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொல் புதிது, சோதி மிக்க நவ கவிதை, எந்நாளும் அழியாத மகாகவிதை’ என பிறநாட்டு நல்லறிஞர்கள் வணங்கிப் போற்றிய கவிதை பாரதியாரின் கவிதை.
தமிழகம் தந்த அந்த மகாகவி: எத்தனையோ இனிய கனவுகளைத் தம் உள்ளத்தில் தேக்கி வைத்திருந்தார்; அவற்றை நிறைவேற்றி வைக்கும் வரம் தருமாறு கடவுளிடம் அவ்வப்போது வேண்டினார். அங்ஙனம் கவியரசர் கண்ட கனவுகள் சிலவற்றை காண்போம்.
நுாறாண்டு வாழ வேண்டும்: நுாறு வயது வரை இன்பமாக வாழ வேண்டும் என்ற கனவு பாரதியாரின் மனத்தில் ஆழமாகக் குடிகொண்டிருந்தது. “நோவு வேண்டேன், நுாறாண்டு வேண்டினேன்” என அவர் ‘விநாயகர் நான்மணி மாலை’யில் பாடினார்; “நுாறு வயது புகழுடன் வாழ்ந்து உயர் நோக்கங்கள் பெற்றிட வேண்டும்” என மகாசக்தியிடம் வேண்டினார். நுாறு ஆண்டுகளில் எவ்வளவோ காரியங்களைச் செய்து முடிக்கலாம் என்று நம்பியிருந்தார்; நல்ல திட்டங்களும் தீட்டி வைத்திருந்தார். ஆனால், ‘நாம் ஒன்று நினைக்க, தெய்வம் இன்னொன்று நினைக்கும்’ என்னும் வாக்கு, அவரது வாழ்வில் உண்மை ஆயிற்று; முப்பத்தொன்பது வயது முடிவதற்குள் மகாகவியின் வாழ்க்கையே முடிந்து போயிற்று!
செல்வம் வேண்டும்: செல்வ வளத்தோடு வாழ வேண்டும் என்ற கனவு பாரதியாருக்கு நிரம்ப இருந்தது. “கனக்கும் செல்வம், நூறு வயது இவையும் தர நீ கடவாயே!” என்பது கணபதியிடம் அவர் கேட்கும் வரம். ‘விநாயகர் நான்மணி மாலை’யில் வரும் ஒரு பாடலில், “நீண்ட புகழ், வாணாள், நிறைசெல்வம், பேரழகு இவற்றை வேண்டுமட்டும் ஈவாய் விரைந்து” என்று விநாயகப் பெருமானிடம் வேண்டினார். ‘யோக சித்தி’ என்னும் தோத்திரப் பாடலில் “நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை நேரே இன்று எனக்குத் தருவாய்” என்று சக்தியிடம் வரம் கேட்ட போதும் பாரதியார் மறவாமல் ‘தொழில் பண்ணப் பெருநிதியம் வேண்டும்’ என்று கேட்டார்.
தலைமை ஏற்க வேண்டும்: கவிதைகளைக் குறித்துப் பற்பல கனவுத் தொழிற்சாலைகளைக் கட்டி வைத்திருந்தார் பாரதியார். அவர் ‘தீயே நிகர்த்து ஒளிவீசும் தமிழ்க் கவிதைகள்’ படைக்க வேண்டும் என விரும்பினார்; “என் நாவில் பழுத்த சுவைத் தெண்டமிழ்ப் பாடல் ஒரு கோடி மேவிடச் செய்குவையே!” என்று விநாயகப் பெருமானிடம் வேண்டினார்; “எள்ளத்தனை பொழுதும் பயனின்றி இராது என்றன் நாவினிலே வெள்ளமெனப் பொழிவாய்” என்று கலைத்தமிழ் வாணியிடம் விண்ணப்பம் செய்தார். கவிதைகளைப் பொறுத்தவரையில் கவியரசருக்கு மூன்று கனவுகள் இருந்தன. முதலாவதாக, “என்றன் பாட்டுத் திறத்தாலே இவ் வையத்தைப் பாலித்திட வேண்டும்” என்று விரும்பினார் அவர்; இரண்டாவதாக, பாடும் திறம் படைத்த தமக்கு வையத் தலைமை ஏற்கும் வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்று கனவு கண்டார்; “அடி, உன்னைக் கோடி முறை தொழுதேன் – இனி வையத் தலைமை எனக்கு அருள்வாய்” என்று சக்தியிடம் வரம் கேட்கவும் செய்தார். மூன்றாவதாக, தம் படைப்புக்களை 40 நுால்களாகப் பிரித்து, ஒவ்வொரு நூலிலும் 10,000 படிகள் அச்சிட வேண்டும் என்றும், ‘இந் நான்கு லட்சம் நுால்களும் தமிழ்நாட்டில் மண்ணெண்ணெய், தீப்பெட்டிகளைக் காட்டிலும் அதிக சாதாரணமாகவும், விரைவாகவும் விலையாகிப் போகும்’ என்றும் அவர் உறுதியாக நம்பினார்.
தமிழன் உருவாக வேண்டும்: “சாதி இரண்டொழிய வேறில்லை” என்று திட்டவட்டமாகப் பாடினார் ஔவையார்; “சாதிப் பிரிவினிலே தீ மூட்டுவோம்” என உணர்ச்சி மிக்க குரலில் முழங்கினார் சிவவாக்கியர். இவர்கள் இருவரையும் அடியொற்றிக் கவியரசரும், “சாதிகள் இல்லையடி பாப்பா – குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” என்றும், “சாதிக் கொடுமைகள் வேண்டாம் – அன்பு தன்னில் செழித்திடும் வையம்” என்றும் பாடினார். அவர் கனவு கண்ட தமிழகத்தில் இன்று இருப்பது போல் நூற்றுக்கு மேற்பட்ட சாதிகள் இல்லை; ஒரே ஒரு சாதிதான் இருந்தது. அதற்கு அவர் வைத்திருந்த பெயர் ‘தமிழ்ச் சாதி’ – ‘மனித சாதி’ – என்பதாகும்.
சாதி ஒழிப்பைப் பொறுத்த வரையில் தம் கனவு நனவாகவில்லை, நடைமுறைக்கு வரவில்லை என்ற உண்மையை நன்கு அறிந்திருந்தார் பாரதியார். எனவே அவர், “விதியே, விதியே, தமிழ்ச் சாதியை என்செயக் கருதி இருக்கின்றாயடா?” என்று விதியிடமே மனம் நொந்து கேட்டார்; “மழை பெய்கிறது, ஊர் முழுதும் ஈரமாகி விட்டது. தமிழ் மக்கள், எருமைகளைப் போல, எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள், ஈரத்திலேயே படுக்கிறார்கள்; ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு. உலர்ந்த தமிழன் மருந்துக்குக்கூட அகப்பட மாட்டான்” என்று தம் வசன கவிதை ஒன்றில் வேதனையோடு எழுதினார். கவியரசர் கனவு கண்டதெல்லாம் தமிழ் கூறு நல்லுலகில் ‘தமிழச் சாதி’ என்ற ஒன்றே இருக்க வேண்டும் என்பதுதான்.
தமிழ் தலைமை பெற்றிட வேண்டும்: தமிழ்நாட்டில் தமிழ்மொழி தலைமை பெற்றுத் தழைத்திட வேண்டும் என்பது பாரதியின் விருப்பமாக இருந்தது. இவ் விருப்பத்தினைக் குறித்து அவர் எழுதியுள்ளதில் சில...
1. “தமிழ்நாட்டிலே தமிழ் சிறந்திடுக. பாரத தேச முழுதிலும் எப்போதும் போலவே வடமொழி வாழ்க. இன்னும் பாரத தேசத்தின் ஐக்கியத்தைப் பரிபூர்ணமாகச் செய்யுமாறு நாடு முழுவதிலும் வடமொழிப் பயிற்சி மேன்மேலும் ஓங்குக. எனினும், தமிழ்நாட்டில் தமிழ்மொழி தலைமை பெற்றுத் தழைத்திடுக”.
2. “தமிழ்நாட்டில் தேசியக் கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக தமிழ் பாஷையில் நடத்த வேண்டும் என்பது பொருள்”.
பாரதி கனவு கண்டபடி, இன்று தமிழ்நாட்டில் தமிழ் சிறந்து விளங்குகின்றதா? கல்வித் துறையைப் பொறுத்த வரையில் அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லா விவகாரங்களும் தமிழ் மொழியில் நடைபெறுகின்றனவா? நம் நாட்டை விட்டு ஆங்கிலேயர் சென்று விட்டனர்; ஆனால், நம்மை விட்டு ‘ஆங்கில மோகம்’ இன்னும் அகன்ற பாடில்லை. ‘இன்றைய நவீன திருஞானசம்பந்தர்கள்’ மூன்று வயது முதற்கொண்டே ‘ஆங்கிலப் பால்’ உண்ணத் தொடங்கி விடுகிறார்கள்! இவ் அவல நிலையைக் கருத்தில் கொண்டே, “வேறு வேறு பாஷைகள் – கற்பாய் நீ வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ!” என்று சாபமிடுவது போல் பாடினார் பாரதியார். பாரதி கண்ட கனவுகள் பல இன்றும் நனவாகாமலே, நடைமுறைக்கு வராமலே உள்ளன. கவியரசரின் கனவுகள் யாவும் நனவானால் உலக அரங்கில் தமிழினம் தலை நிமிர்ந்து நிற்கும்.
-பேராசிரியர் இரா.மோகன் எழுத்தாளர், மதுரை 94434 58286