பதிவு செய்த நாள்
11
டிச
2018
01:12
குழந்தையின் எதிர்கால தலைவிதி என்பது, அக்குழந்தையின் தாயின் முயற்சியில் தான் பொதிந்துள்ளது,” என்கிறார் நெப்போலியன் போனபார்ட். ரூசோ என்ற அறிஞர், “குழந்தைகளுக்கு பயிற்சி கொடுப்பது என்பது ஒரு வகை தொழில். அந்த தொழிலில் நேரத்தை எப்படி செலவிட வேண்டும் என்பதை தாய் தெரிந்து வைத்திருந்தால்தான் லாபம் கிடைக்கும்,” என்கிறார்.பெற்றவர்கள் பெருமையடைவதும், சிறுமையடைவதும் அவர்களது குழந்தைகளால் தான். எனவே குழந்தைப் பருவத்திலிருந்தே தங்கள் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை தாய்மார்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இஸ்லாம் குழந்தைகளை வளர்ப்பதுபற்றி பல நல்ல கருத்துக்களை கூறுகிறது. தாலாட்டு பாடும்போது நபிகள் நாயகம் அவர்களையும், மகான்களையும் போற்றும்படியான பாடல்களை பாடவேண்டும். அதன்பிறகு அல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ் உள்ளிட்ட சொற்றொடர்களை கிளிப்பிள்ளைக்கு கற்றுத்தருவது போல கற்பிக்க வேண்டும்.
சமய சார்புடைய சொற்களை கற்றுத்தருவதால் மார்க்கப்பற்று ஏற்படும். குழந்தைகள் சற்று வளர்ந்த பிறகு குறிப்பிட்ட இடத்தில் மலஜலம் கழித்தல், இடக்கையால் கழுவுதல், பல் துலக்குதல், உடை அணிதல், சாப்பிடும் முன்பு ‘பிஸ்மி’ சொல்லி வலக்கரத்தால் சிந்தாமல் சாப்பிட வைத்தல், சாப்பிட்டபின் இறைவனுக்கு ஷுக்ரு (நன்றி) செய்தல் உள்ளிட்ட நல்ல பழக்கங்களை கற்பிக்க வேண்டும். இரண்டு வயது பூர்த்தியானதும் நீதிநெறி வாக்கியங்கள், நன்மையை போதிக்கும் பாடல்கள், நபிமார்கள், இறை நேசர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், இஸ்லாமிய வரலாற்று நிகழ்ச்சிகள், மனிதநேயத்தை வளர்க்கும் கதைகள் ஆகியவற்றை சொல்லித்தர வேண்டும். நான்கு முதல் 12 வயது வரையான ஆரம்ப நடுநிலை கல்வி கற்கும் காலத்தில் அரபி பாடத்தை கற்றுத்தர வேண்டும். 4 வயது குழந்தைகள் 4மொழிகளை பேசும் திறன் பெற்று விடுகிறார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன. எனவே அவர்களுக்கு அதிகப்படியான வேலை தருகிறோமோ என எண்ணாமல், பிற மொழி பயிற்சியையும் தரவேண்டும்.ஏழு வயதிலேயே தொழுகையை கற்றுத்தர வேண்டும். இந்த வயதிலேயே தொழுகையை தொடங்கிவிட்டால் அவர்கள் நிச்சயமாக நல்லவர்களாகத் திகழ்வர். பெண் குழந்தைகளை கோஷா (பர்தா அணிதல்) முறைப்படி படிக்கவைக்க வேண்டும். இவை மட்டுமின்றி, சிக்கனமான, எளிமையான, இணக்கமான முறையில் குடும்பம் நடத்தும் கலையையும் அவர்கள் உள்ளத்தில் படிய வைக்க வேண்டும். குழந்தைகளை தோழனைப் போல நடத்தவேண்டும்.