பதிவு செய்த நாள்
13
டிச
2018
11:12
மதுரை,: கேரள மாநிலம் ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயிலில் டிச.,26 இரவு 10:00 மணிக்கு தர்மசாஸ்தா - புஷ்கலாதேவி திருக்கல்யாணம் கோலாகலமாக நடக்கிறது.அன்னதான பிரபுவான தர்மசாஸ்தா, சவுராஷ்டிரா சமூக புஷ்கலாதேவியை மணந்து அருள்பாலித்து வருவதால் திருவாங்கூர் மன்னர் மற்றும் தேவசம்போர்டு, சவுராஷ்டிரா சமுதாயத்தினரை சம்பந்தி முறையில் அழைப்பிதழ் அனுப்பி கவுரவிக்கின்றனர். இதன் பொருட்டு ஆரியங்காவு தேவஸ்தான சவுராஷ்டிரா மகாஜன சங்கம் மதுரை என்ற அமைப்பை ஏற்படுத்தி சம்பந்தி உறவு முறை கொண்டாடி திருக்கல்யாண விழாவை இருவீட்டாரும் இணைந்து நடத்தி வருவது சிறப்பு வாய்ந்தது.
திருக்கல்யாணத்தை முன்னிட்டு கேரள மாநிலம் மாம்பழத்துறையில், டிச.,24 ல் அம்பாளை ஜோதி ரூபத்தில் ஆவாஹனம் செய்து சங்கம் சார்பில் அலங்கார ஊர்தியில் ஆரியங்காவுக்கு அழைத்து வரப்படும். டிச.,25 ல் ஆரியங்காவில் தாலப்பொலி எனும் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் மாலை 4:00 மணி, பாண்டியன் முடிப்பு எனும் நிச்சயதார்த்தம் இரவு 8:00 மணிக்கு நடக்கிறது.டிச.,26 ல் திருக்கல்யாண மண்டபத்தில் இரவு 10:00 மணிக்கு தர்மசாஸ்தா - புஷ்கலாதேவி திருக்கல்யாணம் கோலாகலமாக நடக்கிறது. டிச.,27 மண்டலாபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது.