பதிவு செய்த நாள்
13
டிச
2018
11:12
திருப்பதி: திருச்சானுார், பத்மாவதி தாயார் கோவிலில் நடந்து வந்த வருடாந்திர பிரம்மோற்சவம், நேற்று, பஞ்சமி தீர்த்தத்துடன் நிறைவு அடைந்தது. ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் ஆட்சி நடக்கிறது. இங்கு, திருச்சானுாரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில், கடந்த ஒரு வாரமாக, வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்து வந்தது.
ஒன்பதாம் நாளான நேற்று, தாயாருக்கு பஞ்சமி தீர்த்தம் நடந்தது. அதை முன்னிட்டு, தாயார், மாடவீதியில் வலம் வந்தார். அதன்பின், தாயாரும், சக்கரத்தாழ்வாரும், பத்மசரோவரம் திருக்குளக்கரையில் ஏற்படுத்தியுள்ள மண்டபத்திற்கு எழுந்தருளினர். ஏழுமலையான் அனுப்பிய சீர்வரிசைகள், தாயாருக்கு கிடைத்த பின், அவருக்கு ஸ்நபன திருமஞ்சனம் துவங்கியது. பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்டவற்றை திருமலை ஜீயர்கள் எடுத்துத் தர, தாயாருக்கு, அர்ச்சகர்கள் அபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.அதன்பின், திருமலையிலிருந்து ஏழுமலையான் அனுப்பிய, தங்க காசுமாலையை, தாயாருக்கு அணிவித்தனர். திருமஞ்சனத்தின் போது, தாயாருக்கு பலவித உலர்பழங்களால் ஆன மாலைகள், கிரீடங்கள், ஜடைகள் அணிவிக்கப்பட்டன. திருமஞ்சனம் முடிந்த பின், சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. தாயார், பத்மசரோவரத்தில், 1,000 இதழ் உடைய, தாமரை மலர் மீது அவதரித்த தினம், சுக்லபட்ச கார்த்திகை பஞ்சமி தினம்.அதனால், அந்த நாளில், தாயாருக்கு பஞ்சமி தீர்த்தம் நடத்தப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள், திருக்குளத்தில் புனித நீராடினர்.திருச்சானுார் பத்மாவதி தாயாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, திருமலை ஏழுமலையான் கோவிலிருந்து தாயாருக்கு பட்டு வஸ்திரம், தங்க காசுமாலை, கும்ப ஆரத்தி, மங்கல பொருட்கள், பரிமள கலவை, பிரசாதங்கள் உள்ளிட்டவை, யானை மீது, திருமலை திருப்பதிக்கு எடுத்து வரப்பட்டன.