பதிவு செய்த நாள்
13
டிச
2018
01:12
திருத்தணி: மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று நடந்த மகா கும்பாபிஷேகத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார் கிராமத்தில் உள்ளது. இக்கோவிலின் திருப்பணிகள் முடிந்து, 9ம் தேதி, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.நேற்று, காலை, 11:30 மணிக்கு, கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு கோவில் கருவறையின் மீது அமைக்கப்பட்ட விமானத்தின் மீது, கலசநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில் உள்ள நவகிரகங்களுக்கும் கலசநீர் ஊற்றி தீபாராதனை நடந்தது. மதியம், 12:00 மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில், மத்துாரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழாவில் கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி, அரக்கோணம், எம்.பி., அரி, திருத்தணி, எம்.எல்.ஏ., நரசிம்மன், முன்னாள் அமைச்சர் ரமணா உட்பட, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திருத்தணி டி.எஸ்.பி., சேகர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.