பதிவு செய்த நாள்
14
டிச
2018
12:12
திண்டிவனம்: பெங்களூரு பகுதிக்கு, கார்கோ லாரியில் எடுத்து செல்லப்பட்ட, 64 அடி உயர சுவாமி சிலை, திண்டிவனம் அருகே, கடை வீதியில் சிக்கியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கர்நாடக மாநிலம், பெங்களூரு, தெற்கு ஈஜிபுரா பகுதியில், கோதண்டராம சுவாமி கோவில் உள்ளது. அறுபது ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோவிலில், மூலவர் கோதண்டராம சுவாமி, வீர ஆஞ்சநேயர், விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர், வராகர், அய்யப்பன், அஷ்டலட்சுமி, தட்சிணாமூர்த்தி, நவக்கிரகம் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன.
கோதண்டராம சுவாமி கோவிலில், ஒரே கல்லில், 64 அடி உயரத்தில், 11 முகங்கள் மற்றும், 22 கைகள் உடைய விஸ்வரூப கோதண்டராம சுவாமி சிலை மற்றும் ஏழு தலை பாம்புகளுடன் ஆதிசேஷன் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான கல், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த, கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள, பாறை குன்றில் இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த, 2014ம் ஆண்டில், கல் வெட்டும் பணி துவங்கியது. இதன் தொடர்ச்சியாக, தற்போது, கோதண்டராம சுவாமி சிலை செய்ய, 64 அடி உயரம், 26 அடி அகலம் கொண்ட கல்லும், ஆதிசேஷன் சிலை செய்ய, 24 அடி நீளம், 30 அடி அகலம், 12 அடி உயர கல்லும் வெட்டி எடுக்கப்பட்டு உள்ளது. வெட்டி எடுக்கப்பட்ட கல்லில் பெருமாளின் முகம், சங்கு சக்கர கைகள் ஆகியவை செதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பாகங்கள், பெங்களூரில் செதுக்கப்பட உள்ளது.
இதில், முதற்கட்டமாக, ஒரு கல்லில் பெருமாளின் முகம், சங்கு சக்கரம், கைகள் அமைந்துள்ள, 230 டன் எடையில், 64 அடி உயர விஸ்வரூப கோதண்டராம சிலையை, பெங்களூருக்கு கார்கோ லாரி மூலம் அனுப்பி வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கடந்த 9ம் தேதி, கொரக்கோட்டை கிராமத்திலுள்ள குன்றிலிருந்து, விஸ்வரூப கோதண்டராம சிலை, 240 டயர்களை உடைய, ராட்சத கார்கோ லாரியில் ஏற்றப்பட்டது. இந்த கார்கோ லாரி, நேற்று முன்தினம், வந்தவாசி அருகே உள்ள தெள்ளாறு பகுதியிலுள்ள, தனியார் தொழில் நுட்ப கல்லுாரி அருகே, நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையில், இரண்டு நாட்களுக்கு முன், வந்தவாசியை அடுத்துள்ள, விழுப்புரம் மாவட்டம், வெள்ளிமேடுப்பேட்டை பகுதி வழியாக, கார்கோ லாரி செல்லும் போது, தடையாக அதிக
அளவில் கடைகள் இருந்தன.
இதைத்தொடர்ந்து, சிலை கொண்டு வருவதற்கு தடையாக உள்ள கடைகளை அப்புறப்படுத்தி கொடுப்பத்தால், அதற்குண்டான இழப்பீட்டை கோவில் நிர்வாகம் தருவதாக, வர்த்தகர்கள் சங்கத்தினருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, வழியில் தடையாக உள்ள சில கடைகள், நேற்று முன்தினம் உடைத்து வழி ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், கார்கோ லாரி, நேற்று காலை, 11:15 மணியளவில், வெள்ளிமேடுப்பேட்டை பஜார் வழியாக வந்த போது, போதுமான வழி இல்லாமல், சிலையை ஏற்றி வந்த கார்கோ லாரி, வீடுகளையும், மின்கம்பங்களையும் இடித்து நடுவழியில் சிக்கிக்கொண்டது. இதனால், திண்டிவனத்திலிருந்து, வெள்ளிமேடுப்பேட்டை வழியாக, வந்தவாசி, காஞ்சிபுரம் செல்லும் அனைத்து வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் செல்லும் வாகனங்கள், வெள்ளிமேடுப்பேட்டை அடுத்த தாதாபுரத்திலிருந்து, சத்தியவாடி வழியாக தெள்ளாறு செல்லும் வகையில், திருப்பி விடப்பட்டன. நேற்று மாலை, 5:00 மணியளவில், சிலை நகர்ந்து வருவதற்கு தடையாக இருந்த, வீடுகள், கடைகள் இடிக்கும் பணி துவங்கியது. இதற்கிடையில், 64 அடி விஸ்வரூப கோண்டராம சுவாமி சிலையை தரிசனம் செய்வதற்கு, பல்வேறு கிராமங்களிலிருந்து நுாற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.