ராமேஸ்வரம் கோயிலில் மகாலெட்சுமி தீர்த்தம் பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14டிச 2018 12:12
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இன்று (டிச.,14) மகாலெட்சுமி தீர்த்தம் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. ராமேஸ்வரம் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் தினமும் 10 முதல் 15 ஆயிரம் பக்தர்கள் நீராடுகின்றனர். கோயில் விழா மற்றும் விடுமுறை நாட்களில் 30 ஆயிரம் பக்தர்கள் நீராடுவதால், கூட்ட நெரிசலில் தவிக்கின்றனர். இதனை தவிர்க்க 1 முதல் 6வது தீர்த்தம் (மகாலெட்சுமி, காயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி, சங்கு, சக்கரம்) வரை இடம் மாற்றம் செய்ய மதுரை உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டது. அதன்படி கோயில் 2ம் பிரகாரத்தில் புதியதாக 6 தீர்த்த கிணறுகள் தோண்டப்பட்டு, மகாலெட்சுமி தீர்த்தம் தவிர மற்ற 5 தீர்த்தமும் அக்.,28ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்நிலையில், தீர்த்த கிணறுகள் பிரதிஷ்டை குறித்து அறிக்கை அளிக்குமாறு கோயில் இணை ஆணையருக்கு உயர்நீதின்றம் உத்தரவிட்டது. அதன்படி மகாலெட்சுமி தீர்த்தம் பிரதிஷ்டை செய்ய நேற்று கோயில் கல்யாண மண்டபத்தில் ஒரு குண்டத்தில் யாக பூஜை செய்து முதல் கால பூஜை துவங்கியது. இன்று(டிச.,14) 2ம் கால பூஜை முடிந்ததும் காலை 6:00 முதல் 6:30 மணிக்குள் 2ம் பிரகாரத்தில் உள்ள புதிய கிணற்றில் கோயில் குருக்கள் மகாலெட்சுமி தீர்த்தத்தை பிரதிஷ்டை செய்ய உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி செய்து வருகிறார்.