பதிவு செய்த நாள்
15
டிச
2018
11:12
சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இத்தலத்தில், மூலவர், வேங்கடகிருஷ்ணனாகவும்; உற்சவர், பார்த்தசாரதி பெருமாளாகவும் அருள் பாலிக்கின்றனர்.
இக்கோவிலில், ஆண்டுதோறும், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு உற்சவம், சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி, 18ம் தேதி அன்று, சொர்க்க வாசல் திறக்கப்பட உள்ளது.இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்என்பதால், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.இது குறித்து, நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், பார்த்தசாரதி கோவில் உதவிக் கமிஷனர் ஜோதிலட்சுமி கூறியதாவது:வைகுண்ட ஏகாதசி அன்று, எல்.இ.டி., திரைகள் அமைக்கப்பட உள்ளன. பாதுகாப்பு பணியில், 100க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுகின்றனர். கோவிலை சுற்றி, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.மாநகராட்சி, சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை ஆகியவற்றால், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பேருந்துகள், சென்னை நகரின் பல பகுதிகளில் இருந்து இயக்கப்பட உள்ளன.மாற்று திறனாளிகள், காலை, 8:00 மணி முதல், 10:00 மணி வரையும்; முதியோர், காலை, 10:00 மணி முதல், 11:00 மணி வரையும்; உபயதாரர், கட்டளைதாரர்கள், காலை, 11:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை, தெற்கு மாட வீதியில், வரிசையில் செல்லலாம்.வைகுண்ட ஏகாதசி சிறப்பு கட்டண சீட்டு, 16ம் தேதி மதியம், 1:00 மணிக்கு, ஒரு நபருக்கு, ஒரு சீட்டு வீதம் விற்பனை செய்யப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.