பதிவு செய்த நாள்
15
டிச
2018
12:12
திருப்பதி: திருமலையில், வைகுண்ட ஏகாதசியின் போது, தர்ம தரிசனத்திற்கு, 28 மணி நேரம் பக்தர்கள் காத்திருக்க வேண்டும், என, தேவஸ்தான செயல் அதிகாரி, அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் ஆட்சி நடக்கிறது.திருப்பதி, திருமலையில், நேற்று காலை, வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசிக்கான முன்னேற்பாடுகளை பார்வையிட்ட பின், அவர் மேலும் கூறியதாவது:திருமலையில், வருடாந்திர பிரம்மோற்சவ கருட சேவைக்கு அடுத்தபடியாக, வைகுண்ட ஏகாதசியின் போது, ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.கடந்தாண்டு ஏற்பட்ட அனுபவங்களை நினைவில் வைத்து, இந்தாண்டு, தேவஸ்தானம் அதற்கேற்ற வகையில் ஏற்பாடுகளை செய்துள்ளது.வரும், 18ல், வைகுண்ட ஏகாதசி அன்று, அதிகாலை, வைகுந்த வாசல் திறக்கப்பட உள்ளது.அன்று ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள், 16ம் தேதி நள்ளிரவு முதல், வைகுண்டம் காத்திருப்பு அறை, 1 மற்றும், 2ல் காத்திருக்க அனுமதிக்கப்படுவர்.காத்திருப்பு அறைகள் நிரம்பியதும், ஆழ்வார் குளம் தரிசன வரிசை, நாராயணகிரி தோட்டத்தில் உள்ள, நிழற்பந்தலில் காத்திருக்க அனுமதிக்கப்படுவர்.சரியாக, 28 மணி நேர காத்திருப்பிற்கு பின், 18ம் தேதி காலை, 5:30க்கு தர்ம தரிசனம் துவங்கும்.அதற்கு பின், தரிசன வரிசை நகரத் துவங்கும். அன்று முதல், 19ம் தேதி நள்ளிரவு, 12:00 மணி வரை, பக்தர்கள் வைகுந்த வாசல் வழியாக செல்ல அனுமதிக்கப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.