ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மகாலெட்சுமி தீர்த்தம் புதிய கிணற்றில் ஆகம முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டது. ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் 1 முதல் 6வது தீர்த்தம் வரை இடமாற்றம் செய்ய மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. அதன்படி கோயில் 2ம் பிரகாரத்தில் 6 புதிய கிணறுகள் தோண்டப்பட்டு, 1ம் தீர்த்தம் தவிர மற்ற 5 தீர்த்தமும் அக்.,28 ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. முதலாவது தீர்த்தமான மகாலெட்சுமி தீர்த்தத்தை நேற்று காலை 6:30 மணிக்கு கோயில் குருக்கள் உதயகுமார் புனித நீரை ஊற்றி பிரதிஷ்டை செய்தார். இணை ஆணையர் மங்கையர்கரசி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர் ககாரின், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், கலைசெல்வம், கண்ணன் பங்கேற்றனர். குறுகிய பாதையில் இருந்த 22 வது கோடி தீர்த்த நீரை மோட்டார் மூலம் எடுத்து, 2ம் பிரகாரத்தில் புதியதாக அமைத்த கோமுகம் வழியாக நீரை ஊற்றி பக்தருக்கு தெளித்தனர். நேற்று முதல் வடக்கு கோபுர வாசல் வழியாக பக்தர்கள் கோயிலுக்குள் சென்று புனித நீராடினர். ஏற்கனவே கிழக்கு வாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.