பதிவு செய்த நாள்
17
டிச
2018
11:12
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில், மார்கழி மாத பிறப்பு பூஜைகள் நேற்று (டிசம்., 16ல்) சிறப்பாக நடந்தன. மார்கழி, 30 வரை, தினமும் அதிகாலை, 4:30 மணிக்கு, கோவில் நடைதிறக்கப்படுகிறது.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில், மார்கழி மாத சிறப்பு பூஜையை முன்னிட்டு, நேற்று (டிசம்., 16ல்) மதியம், 2:30 மணிக்கு, வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில், திருப்பாவை பட்டில் ஆண்டாளும், ரெங்கமன்னாரும் எழுந்தருளினர். அங்கு, கிரிபட்டர் சிறப்பு பூஜை நடத்தினார்.
பின்னர், அரையர் நாதமுனிமுகுந்தனின் அரையர்சேவையும், வேதபிரான் அனந்தராமன் பட்டரின் வேதம் படித்தலும், திருப்பள்ளி எழுச்சி, திருப்பல்லாண்டும், தீர்த்தகோஷ்டி, சேவாகாலமும் நடந்தது.விழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று முதல், மார்கழி, 30 வரை, தினமும் அதிகாலை, 4:30 மணிக்கு கோவில் நடை திறக்கபடுகிறது. சொர்க்கவாசல் திறப்புவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஆண்டாள் கோவிலில், நாளை காலை, 6:20 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
இதை முன்னிட்டு, அதிகாலை, 3:30 மணிக்கு, பெரியபெருமாள், ஆண்டாள், ரெங்கமன்னார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, காலை, 6:20 மணிக்கு, சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, ஆழ்வார்கள் எதிர்கொண்டு சேவிக்க எழுந்தருள்கின்றனர்.பின்னர் மாடவீதிகள் சுற்றிவந்து, ராப்பத்து மண்டபம் சேருகின்றனர். அங்கு ஆழ்வார்கள் மங்களாசாசனம், திருவாய்மொழி துவக்கம், அரையர் அருளிப்பாடு, பெரியபெருமாள் பத்தி உலாவுதல், திருவாராதனம், அரையர் வியாக்யானம், சேவாகாலம், தீர்த்தகோஷ்டி முடிந்து, பிற்பகல், 3:30 மணிக்கு, ஆஸ்தானம் சென்றடைகின்றனர்.