பதிவு செய்த நாள்
17
டிச
2018
11:12
நாமக்கல்: மார்கழி மாத, முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்ச நேயருக்கு, 1,008 லிட்டர் பாலில், சிறப்பு அபிஷேகம் நடந்தது.நாமக்கல்லில், ஒரே கல்லினால், 18 அடி உயரத்தில், ஆஞ்சநேயர் நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
சனி பகவானின் தாக்கத்தை குறைக்கும் வகையில், ஒவ்வொரு தமிழ் மாதமும், முதல் ஞாயிற்றுக்கிழமையில், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெறும்.
அதேபோல், நேற்று (டிசம்., 16ல்) மார்கழி முதல் ஞாயிறு முன்னிட்டு, காலை, 10:00 மணிக்கு, ஆஞ்சநேயருக்கு வடை மாலை அலங்காரம் நடந்தது. காலை, 11:00 மணிக்கு, நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், 1,008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால், சிறப்பு அபிஷேகம் நடந்தது. பிற்பகல், 1:00 மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது.தமிழகத்தின், பல்வேறு பகுதிகளில் வந்திருந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.