பதிவு செய்த நாள்
17
டிச
2018
03:12
ராசிபுரம்: திருப்பதி வைகுண்ட ஏகாதசிக்கு, ராசிபுரத்தில் மலர்கள் தொடுத்து அனுப்பப்பட்டது.
சேலம் மாவட்டம், கொங்கணபுரத்தில் உள்ள திருமலை திருப்பதி ஸ்ரீமன் நாராயணா நித்ய புஷ்ப கைங்கர்ய சபா டிரஸ்ட் சார்பில், ஆண்டுதோறும் பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசி தினங்களுக்கு மாலை அனுப்பப்படுகிறது. வெங்கடாஜலபதி மற்றும் கோவில் கோபுரம், உள் பிரகாரம், கொடிமரம் ஆகியற்றை அலங்கரிக்க, மாலைகள் பயன்படுத்தப்படுகிறது. 10 டன் எடையளவு மலர்களை தொடுக்க வேண்டும் என்பதால், ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பக்தர்கள் உதவியுடன் இந்த பணியை செய்து வருகின்றனர்.
வரும், 18ல் நடக்கவுள்ள வைகுண்ட ஏகாதசிக்கு, மலர் மாலைகள் அனுப்ப ராசிபுரத்தில் பெண்கள் மலர்கள் தொடுத்தனர். ராசிபுரம் பட்டணம் சாலையில் உள்ள சரவண மஹாலில் நேற்று (டிசம்., 16ல்) காலை, 8:00 மணி முதல், மலர்கள் தொடுக்கும் பணி தொடங்கியது. மல்லி, ரோஜா, சாமந்தி, மேரிகோல்ட், துளசி, அரளி, தாமரை, சம்பங்கி ஆகிய மலர்கள் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டது. இவைகளை பெண்கள் மாலைகளாக தொடுத்தனர். ஆறு டன் மலர் மாலைகள் தொடுக்கப்பட்டு, நேற்று (டிசம்., 16ல்) இரவு திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.