பதிவு செய்த நாள்
17
டிச
2018
03:12
சென்னிமலை: சென்னிமலை டவுன் ஐயப்பா நகர், ஐயப்ப சுவாமி கோவிலில் ஆண்டுதோறும், மார்கழி முதல் ஞாயிற்றுக் கிழமையில், பால் அபிஷேக விழா நடப்பது வழக்கம். அதன்படி, இந்த வருடம் 10ம் ஆண்டு பாலாபிஷேக விழா நேற்று (டிசம்., 16ல்) நடந்தது. ஏராளமான பக்தர்கள் ஐயப்ப சுவாமி கோவிலில் இருந்து, பால் குடங்களுடன் புறப்பட்டு, மேள, தாளங்களுடன் சென்னிமலை, நான்கு ராஜவீதிகளில் வலம் வந்தனர். பின், மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு, மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அங்கிருந்து, ஐயப்பா நகரில் உள்ள, கோவிலுக்கு சென்றனர். அங்கு ஐயப்ப சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, ஸ்ரீ ஐயப்பா பக்த ஜனசபா நிர்வாகிகள் செய்திருந்தனர்.
* கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஐயப்பன் கோவிலில், 35ம் ஆண்டு மண்டல மகர விளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் (டிசம்., 15ல்) காலை பெரிய நாயகியம்மன் சமேத கைலாசநாதர் திருக்கல்யாண உற்சவ விழா நடந்தது. மாலை கிருபானந்த வாரியாரின் சிஷ்யை, உபன்யாசசிம்மம் லதா கதிர்வேல் தலைமையில், சுமங்கலி பெண்கள் திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து, ஐயப்பன் திருவீதி உலா வாணவேடிக்கையுடன் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.