பதிவு செய்த நாள்
17
டிச
2018
03:12
தர்மபுரி: அதகபாடி லட்சுமி நாராயண ஸ்வாமி கோவிலில், நாளை (டிசம்., 18ல்) சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.வைகுண்ட ஏகாதசி விழாவன்று, பெருமாள் கோவில்களில் பரமபத வாசல் என்னும் சொர்க்க வாசல் திறப்பு விழா நடப்பது வழக்கம். இந்தாண்டு, நாளை வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. இதையொட்டி, அதகபாடி லட்சுமி நாராயண ஸ்வாமி கோவிலில், காலை, 4:30 மணிக்கு, பரமபத வாசல் திறக்கப்படவுள்ளது. இதேபோல், செட்டிக்கரை சென்றாய பெருமாள் கோவில், பழைய தர்மபுரி பெருமாள் கோவில், பாப்பாரப்பட்டி, மணியம் பாடி பெருமாள் கோவில்களில், பரமபத வாசல் திறப்பு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
* மல்லசமுத்திரம்: காளிபட்டி, சென்றாயபெருமாள் கோவிலில், நாளை (டிசம்., 18ல்) சொர்க்கவாசல் திறப்புவிழா நடக்க உள்ளது. திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரம் அடுத்துள்ள காளி பட்டியில் பிரசித்திபெற்ற சென்றாய பெருமாள் கோவிலில், நாளை வைகுண்ட ஏகாதசி திருவிழா நடக்க இருப்பதையொட்டி, இன்று (டிசம்., 17ல்)இரவு, 7:00 மணிக்கு சென்றாய பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனை நடக்க உள்ளது. நாளை (டிசம்., 18ல்) காலை, 4:30மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து, திருக்கோடி தீபம்ஏற்றப்படும். 5:00 மணிக்கு சொர்க்கவாசல் வழியாக, சுவாமி சிறப்பு தரிசனம் தருவார். தொடர்ந்து அன்னதானம், கர்நாடக சங்கீதம், நாதஸ்வர கச்சேரி நடைபெறும். ஏற்பாடுகளை, செயல் அலுவலர் சுதா, தர்மகர்த்தா ரங்கசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.
* செஞ்சி:சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் நாளை (டிசம்., 18ல்) சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.செஞ்சி அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை காலை 5.00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. தொடர்ந்து சுவாமி கிரிவலமும். மூலவருக்கு சிறப்பு மலர் அலங்கரம் செய்யப்படுகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
* ரிஷிவந்தியம்:ஆதிதிருவரங்கம், அரங்கநாத பெருமாள் கோவிலில் நாளை 18ம் தேதி சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.ரிஷிவந்தியம் அடுத்த ஆதிதிருவரங்கம் கிராமத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நாளை 18 ம் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனையொட்டி இன்று 17 ம் தேதி மாலை மோகன அவதாரத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார்.
*தியாகதுருகம்: தியாகதுருகம் பெருமாள் கோவிலில் நாளை (டிசம்., 18ல்)சொர்க்கவாசல் திறப்புவிழா நடக்கிறது.தியாகதுருகம், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனுவாச பெருமாள் கோவிலில் மார்கழி மாத உற்சவம் நடந்து வருகிறது. நாளை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நடக்கிறது.அதிகாலை 3:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பூஜைகள் செய்யப்படுகிறது. அதைத்தொடர்ந்து 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சர்வ அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
பின்னர் சுவாமி திருவீதியுலா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை சமுதாய பராமரிப்பு கமிட்டி தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் விழா குழுவினர் செய்துள்ளனர்.