பதிவு செய்த நாள்
18
டிச
2018
01:12
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், 31ல், திருப்படி திருவிழாவும், ஜன., 1ம் தேதி புத்தாண்டு சிறப்பு தரிசனமும் நடக்கிறது.திருத்தணி முருகன் கோவிலில், ஆண்டுதோறும், டிச., 31ம் தேதி திருப்படித் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. மலைக்கோவிலுக்கு செல்வதற்கு, 365 படிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இது ஓராண்டின் நாட்களை குறிப்பதால், இவ்விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. அன்று பக்தர்கள், படிகள் தோறும், மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றி வழிபடுவர். மேலும், நுாற்றுக்கணக்கான பஜனை குழுவினர், ஒவ்வொரு படிகளிலும், பக்தி பாடல்களை பாடிவாறு, மலைக்கோவிலுக்கு சென்று மூலவரை தரிசிப்பர்.அந்த வகையில், இம்மாதம், 31ம் தேதி, திருப்படித்திருவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்து, ஆட்சியர் தலைமையில், நாளை, மலைக்கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில், காலை, 9:00 மணிக்கு, ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.இக் கூட்டத்தில், காவல் துறை, வருவாய் துறை, தீயணைப்பு, சுகாதாரம், போக்குவரத்து உட்பட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்று, துறையின் சார்பில் ஏற்பாடு செய்ய உள்ள பணிகள் குறித்து விளக்குவர்.