பதிவு செய்த நாள்
18
டிச
2018
01:12
கரூர்: வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, நம்பெருமான் மோகினி அலங்காரத்தில், பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். கரூர், மேட்டுத் தெருவிலுள்ள அபய பிரதான ரெங்கநாத சுவாமி கோவிலில், கடந்த, 8ல், வைகுண்ட ஏகாதசி விழா துவங்கியது. தினமும் நடந்த பகல்பத்து நிகழ்ச்சியில், உற்சவர் பெருமாள் கோவில் மண்டபத்தில், பல்வேறு சிறப்பு அலங்காரங்களில், பக்தர்களுக்கு காட்சியளித்தார். பத்தாம் நாளான நேற்று, பெருமாளுக்கு மோகினி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சுவாமி கோவில் வளாகத்தில் உலா வந்து, மண்டபத்தில் இருந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று காலை, 4:00 மணியிலிருந்து 5:30 மணிக்குள், நம்பெருமான் பரமபத வாசலான சொர்க்க வாசலைக் கடந்து, பக்தர்களுக்கு காட்சியளிப்பார். அதன் பின் கோவிலுக்கு வெளியே வீதி உலா சென்று, கோவில் மண்டபத்தில் வீற்றிருப்பார். அடுத்து துவங்கும் ராப்பத்து விழாவில், உற்சவருக்கு தினமும் சிறப்பு அலங்காரம் நடக்கும். வைகுண்ட ஏகாதசி விழாவில், கோவிலில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்கவுள்ளதால், பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடவுள்ளனர். அதே போல் கரூர் நகரிலுள்ள, பண்டரிநாதன் கோவிலிலும், வைகுண்ட ஏகாதசி விழாவிற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.