பதிவு செய்த நாள்
19
டிச
2018
11:12
சென்னை: வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று அதிகாலை, திருவல்லிக்கேணி பார்த்த சாரதி பெருமாள், திருநீர்மலை ரங்கநாத பெருமாள், தி.நகர் ஏழுமலையான் கோவில்களில், சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.மார்கழி மாதம், வளர்பிறை ஏகாதசியை, வைகுண்ட ஏகாதசி உற்சவமாக, வைணவர்கள் கொண்டாடி வருகின்றனர். அன்று, திருமாலின் இருப்பிடமான வைகுண்டத்தின் கதவுகள் திறக்கப்படும் என்பது, வைணவர்களின் நம்பிக்கை.நுாற்றி எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியான, நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு, மூலவர் முத்தங்கிசேவை நடந்தது.
அதைத் தொடர்ந்து, மகா மண்டபத்தில் எழுந்தருளிய மூலவருக்கு, சிறப்பு அலங்காரமும், வைர அங்கி சேவையும் நடந்தது. அதிகாலை, 4:00 மணிக்கு, உற்சவர் உள்புறப்பாடு நடந்தது. அதிகாலை, 4:30 மணிக்கு, பரமபத வாசல் எனும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, ஸ்ரீதேவி - பூதேவி நாச்சியாருடன், உற்சவர் பார்த்தசாரதி பெருமாள், நம்மாழ்வாருக்கு காட்சியளித்தார். பக்தர்கள், கோவிந்தா... கோஷத்துடன், பெருமாளை தரிசித்தனர். பின், சடகோபன் நம்மாழ்வாருக்கு மரியாதை செய்யப்பட்டு, வேத திவ்யப் பிரபந்தம் துவங்கியது.காலை, 5:15 மணிக்கு, உற்சவர் சொர்க்க வாசலை கடந்து, பக்தி உலா வந்தார். இதையடுத்து, திருவாய் மொழி மேல் மண்டபத்தில் அமைந்துள்ள, புண்ணிய கோடி விமானத்தில், உற்சவர் எழுந்தருளி, சேவை சாதித்தார். நேற்று இரவு, 10:00 மணிக்கு, உற்சவர் அலங்கார திருமஞ்சனம் நடந்தது. அதைத் தொடர்ந்து, நம்மாழ்வாருடன், மாட வீதிகளை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த வைபவத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, பெருமாளை தரிசித்தனர்.இதேபோல, திருநீர்மலை ரங்கநாத பெருமாள், தி.நகர் ஏழுமலையான், அடையாறு அனந்த பத்மநாப சுவாமி, நங்கநல்லுார் ஹயக்கிரீவர் உள்ளிட்ட, கோவில்களில் நேற்று அதிகாலை, சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பெருமாளை தரிசித்தனர்.