பதிவு செய்த நாள்
19
டிச
2018
11:12
திருப்புல்லாணி : திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 108 வைணவத் திருத்தலங்களில் 44 வது இடத்தில் உள்ளது. இங்கு அத்யயன உத்ஸவத்தை முன்னிட்டு டிச., 7 முதல் பகல் பத்து பூஜை முறைகள் நடந்தது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று காலை 10:00 மணிக்கு சயனத்திருக்கோலமும், மதியம் 1:00 மணிக்கு விஸ்வரூப தரிசனக்காட்சிகளும், மாலை 6:30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு ஆயத்த பூஜைகளும் நடந்தது.
இரவு 7:15 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண ஜெகந்நாதப்பெருமாள் உற்சவர்களாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சீர்பாத துாக்கிகளால் பட்டாபிஷேக ராமர் சன்னதி வழியாக உள்பிரகார வீதி உலா வந்து, ஆழ்வார்கள் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. பின், இரவு 7:35 மணிக்கு பரமபதவாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ஏகாதசி மண்டபம் வழியாக பருத்தி உலா எனப்படும் இங்கும் அங்கும் பல்லாக்கை அசைத்தவாறு பெருமாள் மூன்று முறை மீண்டும், மீண்டும் வலம் வந்தார். பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்கினார்கள். கோயில் ஸ்தானிக பட்டாச்சாரியார்களால் நாலாயிர திவ்ய பிரபந்தப்பாடல்கள் பாடப்பட்டு, சாற்றுமுறை, கோஷ்டி பூஜை முறைகள் நடந்தது. பெருமாள் எதிர்ஸ்தானம் மூலம் மூலவரின் இருப்பிடம் கொண்டு செல்லப்பட்டார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர். இன்று (டிச.,19) முதல் 27 வரை ராப்பத்து உற்சவம் துவங்க உள்ளது.
*பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நேற்று காலை 4:00 மணி முதல் திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை பாடப்பட்டது. தீபராதனைக்குப் பின் 5:30 மணிக்கு பெருமாள் வெண்பட்டு உடுத்தி, சங்கு, சக்கரம் ஏந்தி, தலையில் கொக்கு முடியுடன் ராஜாங்க கோலத்தில் சொர்க்கவாசல் வழியாக வந்தார். ஆடி வீதியை வலம் வந்த பெருமாளுக்கு ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றல் நிகழ்ச்சி நடந்தது.
*பரமக்குடி அனுமார் கோதண்டராமசாமி கோயிலில் சிறப்பு தீபாராதனைகளுக்கு பின் காலை 6:00 மணிக்கு ராமர் கருடவாகனத்தில் பரமபதவாசல் வழியாக வந்தார்.
* எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் காலை 5:00 மணிக்கு மேல் பரமபதவாசலை கடந்து வந்தார்.
* ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாலை 5:20 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, சேதுமாதவர் சுவாமி பக்தருக்கு காட்சியளித்தார்.