விருதுநகர் பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19டிச 2018 12:12
விருதுநகர் ; விருதுநகர் மாவட்டத்தில் பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு கோலாகலமாக நடந்தது. விருதுநகர் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள பத்மாவதி சமேத சீனிவாச பெருமாள் கோயிலில் அதிகாலை 5:00 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நடக்க சிறப்பு பூஜைகள் நடந்தது. ரங்கநாத கோயில், சூலக்கரை பெருமாள் கோயில், சூலக்கரை அழகாபுரி பெருமாள் கோயில், வச்சகாரப்பட்டி அருகே தாளப்பட்டி வெங்கடாஜலபதிகோயில், சாத்துார் பெருமாள் கோயில், சிவகாசி பெருமாள் கோயில், திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் கோயில், வத்தராயிருப்பு சேது நாராயண பெருமாள் கோயில் ஆகியவற்றில் சொர்க்க வாசல் திறப்பு அதிகாலையில் நடந்தது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ராஜபாளையம்: ராஜபாளையம் திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மைய கோயிலில் ஸ்ரீனிவாசப்பெருமாள் ஏக அலங்காரம், மலையப்ப சுவாமி சயன அலங்காரத்திலும் காட்சியளித்தனர். சொர்க்க வாசல் காலை 7:00 மணிக்கு திறக்கப்பட்டது.
* சம்பந்தபுரம் சோலைமலை பெருமாள் கோயிலில் அதிகாலை அபிஷேகம் அலங்காரம் முடிந்து காலை 5:30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. * புதுப்பாளையம் கோதண்டராமர் கோயில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு அதிகாலை 5:30 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. * வேட்டை வெங்கடஷே பெருமாள் கேயிலில் பெருமாள், பரமபத நாதர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
சாத்துார்: சாத்துார் வெங்கடாசலபதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு காலை 5:30 மணிக்கு பெருமாள் சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி வலம் வந்தார். இதன் பின் ர் சிறப்பு அலங்காரத்துடன் காலை 7:45 மணிக்கு சொர்க்கவாசல் வழியாக சுவாமி எழுந்தருளினார்.பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் சுவாமியை எதிர்கொண்டு வரவேற்றனர். ரெங்கநாத பட்டர் தலைமையில் பட்டர்கள் ஆழ்வார் பாசுரங்கள் பாடி ஆராதித்தனர். ் மாலை 5:00 மணிக்கு சுவாமி ரத வீதிகள் வழியாக வலம் வந்தார்.
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சேதுநாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. அதிகாலையில் சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தயார்களுக்கு 18 வகை சிறப்பு அபிஷேகங்களுடன் திருமஞ்சன வழிபாடு நடந்தது. சிறப்பு பூஜைகளுக்கு பின் சுவாமி பச்சைப் பட்டு உடுத்தி சப்பரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து தாயார்கள் இருவரும் எழுந்தருளினர். மூவருக்கும் திருப்பாவை பாராயண வழிபாடு நடந்தது. பின் சொர்க்க வாசல் வழியாக சுவாமிகள் வெளியே வர. பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க பூக்களை தூவி வழிபட்டனர். முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்து கோயிலை அடைந்தது. அங்கு திவ்ய நாம பஜனை வழிபாடு , மங்கள பூஜைகளும் விடியும் வரை நடந்தது. கோயில் சேவா சமிதி டிரஸ்ட் செயலாளர் நாராயணன் ஏற்பாடுகளை செய்தார்.