பதிவு செய்த நாள்
24
டிச
2018
11:12
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடந்த ஆருத்ரா மகா தரிசன உற்சவத்தில், ஆனந்த நடனமாடி வந்த சுவாமியை, ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர். கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், மார்கழி ஆருத்ரா மகா தரிசன உற்சவம், 14ம் தேதி துவங்கியது.
பத்தாம் நாள் உற்சவத்தில், தினசரி சிவகாமசுந்தரி அம்மன் சமேத நடராஜர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, வேதபாராயணம், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, சுவாமி வீதியுலா நடந்து வந்தது. நேற்று முன்தினம், தேரோட்டம் நடந்தது.நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, ராஜசபை ஆயிரங்கால் மண்டபத்தில், நடராஜர் சமேத சிவகாமசுந்தரி அம்மனுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. திருவாபரண அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.மதியம், 1:30 மணிக்கு, பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி புறப்பாடு நடந்தது. பொது தீட்சிதர்கள், சித்சபையில் ரகசிய பூஜை முடிந்து, பஞ்சமூர்த்திகள், ஆயிரங்கால் மண்டபம் முன் எழுந்தருளினர்.மாலை, 4:10 மணிக்கு, சிவகாமசுந்தரி அம்மன் சமேத நடராஜர், சித்சபை பிரவேசத்திற்கு ஆனந்த தாண்டவ நடனமாடியவாறு வந்து, ஆருத்ரா மகா தரிசன காட்சியளித்தார்.கூடியிருந்த பல்லாயிரக்கணக்கானோர், தில்லை அம்பலத்தானே, பொன்னம்பலத்தானே என, கோஷம் எழுப்பி, தரிசனம் செய்தனர்.