மண்டலபூஜைக்கு சபரிமலை தயார் : புறப்பட்டது தங்க அங்கி பவனி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24டிச 2018 11:12
சபரிமலை: சபரிமலையில் மண்டல பூஜை ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி, ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து நேற்று காலை புறப்பட்டது.சபரிமலை மண்டலபூஜை கார்த்திகை 1 முதல் 41 நாட்கள் தொடர்ந்து நடக்கும். பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவிக்க திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா 1973-ல் தங்க அங்கியை வழங்கினார்.
இது மண்டல பூஜை அன்றும், அதற்கு முதல் நாளிலும் அணிவிக்கப்படும்.பத்தணந்திட்டை மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் வைக்கப்பட்டுள்ள அங்கி, மண்டலபூஜைக்கு நான்கு நாட்கள் முன் பவனியாக எடுத்து வரப்படும்.நேற்று அதிகாலை 5:00 மணிக்கு கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்காக அங்கி வைக்கப்பட்டிருந்தது. காலை 7:30 -க்கு புறப்பட்டு இரவில் ஓமல்லுார் பகவதி கோயிலில் பவனி தங்கியது. இன்று காலை அங்கிருந்து புறப்பட்டு கோந்நி முருங்கமங்கலம் கோயிலில் தங்கும். நாளை அங்கிருந்து புறப்பட்டு பெருநாடு சாஸ்தா கோயிலில் தங்குகிறது. டிச.,26- காலை புறப்பட்டு மதியம் பம்பை வந்தடையும். பம்பை கணபதி கோயில் அருகில் தரிசனத்துக்காக வைக்கப்பட்டு சன்னிதானத்துக்கு கொண்டு செல்லப்படும்.டிச.,26 மாலை 6:30 மணிக்கு தங்க அங்கி அணிவித்து ஐயப்பனுக்கு தீபாராதனை நடக்கும். டிச.,27ல் மண்டலபூஜை நேரத்திலும் அங்கி அணிவிக்கப்பட்டிருக்கும்.